என் பெயர் ஆர்.திவ்யா. நான் கரூர் மாவட்டத்தில் காக்காவடி என்ற ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வருகிறேன். எங்கள் குடும்பம் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம். என் அப்பா கால் டாக்ஸி ஓட்டுநராக வேலை செய்கிறார். என்னையும் என் தம்பியையும் மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்கள்.
“நான் முதல்வன்” போட்டித் தேர்வுகள் பிரிவின் வங்கி, SSC, RRB உறைவிடப் பயிற்சி பெற்று, சமீபத்தில் நடைபெற்ற IBPS Probationary Officer (PO) வங்கித் தேர்வில் நான் தேர்ச்சி பெற்றுள்ளேன். தற்போது Central Bank of India வங்கி அதிகாரியாக வேலை செய்கிறேன்.
12ஆம் வகுப்பு முடித்த பிறகு எந்த பட்டப்படிப்பு படிக்கலாம் என்று யோசித்தபோது, எனக்கு வேளாண்மைத் துறையில் ஆர்வம் இருந்ததால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2023ஆம் ஆண்டு பி.எஸ்சி., வேளாண்மை பட்டப்படிப்பை முடித்தேன். அரசுத் தேர்வுகள் மற்றும் வங்கித் தேர்வுகள் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதனால் அந்தத் தேர்வுகளுக்குத் தயாராகத் தொடங்கினேன். ஓர் ஆண்டுக்குள் சுமார் ஆறு தேர்வுகளை எழுதியிருந்தேன். ஆனால் எந்தத் தேர்விலும் முதற்கட்டத் தேர்வை கூடத் தாண்ட முடியவில்லை. வீட்டிலும் பொருளாதார சிரமங்கள் இருந்தன. அந்த சமயத்தில், “நான் முதல்வன்” திட்டத்தின் SSC, RRB வங்கி உறைவிடப் பயிற்சி மய்யத்தை பற்றி என் நண்பர் மூலம் எனக்கு தெரிய வந்தது.
அங்கு பயிற்சி பெற்று, அதற்கான தேர்வை நான் எழுதினேன். அந்த தேர்வில் நான் தேர்ச்சி பெற்றேன். அடுத்த வங்கித் தேர்வை நிச்சயம் நான் தாண்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் உருவானது.
சிறீவில்லிபுத்தூரில் உள்ள “நான் முதல்வன்” உறைவிடப் பயிற்சி நிலையத்தில் வாய்ப்பு கிடைத்தது. அங்கு கட்டணமில்லா பயிற்சி, தங்கும் வசதி மற்றும் உணவு வசதி வழங்கினர். அங்கு இருந்த கணினி ஆய்வக வசதிகளும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கணினி வழங்கப்பட்டது. முதல்நிலை (Prelims) மற்றும் முக்கியத் தேர்வு (Mains) தேர்வுகளுக்குத் தனித்தனியாக, மாணவர்களின் நிலைக்கு ஏற்ப பயிற்சி அளிக்கப் பட்டது.
முதல்நிலை (Prelims) தேர்வுக்காக Apptitude, Reasoning, ஆங்கிலம் போன்ற பாடங்கள் அடிப்படை நிலை முதல் தெளிவாக கற்பிக்கப் பட்டன.
முக்கிய (Mains) தேர்வில் மாணவர்கள் எவ்வாறு முன்னேறலாம் என்பதையும், அவர்கள் எந்தப் பகுதிகளில் பலவீனமாக உள்ளார்கள் என்பதையும் கவனித்து அதற்கேற்ப பயிற்சி அளித்தார்கள். இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
IBPS PO தேர்வில் முக்கிய தேர்வுக்கான பயிற்சி மிகவும் பயனளித்தது. முக்கிய தேர்வைத் தாண்டிய மாணவர்களுக்கு நேர்கானலுக்கான தனிப்பட்ட பயிற்சியும் அளிக்கப்பட்டது. அதற்காக தனியாக பயிற்சி யாளர்களையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். இது நேர்காணலில் எந்தப் பயமும் இல்லாமல் தன்னம்பிக்கையுடன் பங்கேற்க மிகவும் உதவியாக இருந்தது.
ஏப்ரல் 1ஆம் தேதி IBPS PO தேர்வு முடிவுகள் வெளியானது. நான் தேர்ச்சி பெற்றுள்ளேன் என்ற செய்தி அறிந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்தச் செய்தியை கேட்டதும் என் பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். அது எனக்கு மறக்க முடியாத சந்தோஷமான தருணமாக இருந்தது. எங்கள் குடும்பத்தில் நான் தான் முதல் பட்டதாரி.
இந்த வேலை எங்கள் குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவும் என்ற நம்பிக்கை உள்ளது. “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கட்டணமில்லா பயிற்சி மற்றும் தங்கும் வசதிகள் இந்தத் தேர்வில் வெற்றி பெற மிகவும் உதவியாக இருந்தன. இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களுக்கும், “நான் முதல்வன்” திட்டத்திற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
