சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னை, பிப். 22– தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில் திருவிழா அழைப்பிதழ்களில், உபயதாரர்களின் பெயர்களுடன் ஜாதிப் பெயர்களைக் குறிப்பிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஜாதிப் பெயர்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவ விழாவுக்கான அழைப்பிதழில், உபயதாரர்களின் பெயர்களுக்குப் பின்னால் ஜாதிப் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதற்குத் தடை விதிக்கக் கோரி திருப்போரூரைச் சேர்ந்த சமரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, கோயில் திருவிழாக்களில் ஜாதிப் பெருமையை முன்னிறுத்துவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டதாவது:
சமத்துவமே அடிப்படை
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற உயரிய தத்துவத்தைக் கொண்டது நம் சமூகம். ஆனால், பிறப்பால் மட்டுமே வரும் ஜாதி, மக்களிடையே பிளவை ஏற்படுத்துகிறது.
இந்து சமய அறநிலையத்துறை என்பது அரசு சார்ந்த அமைப்பு. அத்துறை நடத்தும் விழாக்களில் ஜாதிப் பெருமையை ஊக்குவிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
அதிகாரிகளின் பொறுப்பு
நாட்டில் ஜாதியை ஒழிக்க ஒவ்வொரு அதிகாரியும் தங்களால் இயன்ற முயற்சியை எடுக்க வேண்டுமே தவிர, அதை மேலும் பெரிதுபடுத்தும் வகையில் செயல்படக் கூடாது. இந்த வழக்கினை முடித்து வைத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இனிவரும் காலங்களில் கோயில் திருவிழாக்களுக்காக அச்சடிக்கப்படும் அழைப்பிதழ்களில் உபயதாரர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் ஜாதிப் பெயர்கள் இடம்பெறக் கூடாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
