கேள்வி: திராவிட மாடல் அரசின் (2026-2027) இடைக்கால பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களை இன்பத்தில் திளைக்க வைத்திருப் பதின் மூலம், வர இருக்கின்ற (2026) சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவுடன் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது அல்லவா?
– இல.சீதாபதி, மேற்கு தாம்பரம்.
பதில்: உங்கள் கருத்தும், உற்சாகமும் நிச்சயம் பொய்க்காது!
கேள்வி: வேளாண் துறையை ஊக்குவிக்கும் பொருட்டு தொலைநோக்குப் பார்வையுடன் விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இடைக்கால வேளாண் பட்ஜெட்டில் ரூ. 47 ஆயிரத்து 248 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்று எதிர்பார்க்கலாமா?
– கி.கோவிந்தராஜ், திருவண்ணாமலை.
பதில்: நிச்சயமாக! அதிலென்ன சந்தேகம்?

கேள்வி: அரசியல் தலைவர்கள் சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ள அறிவுரையை ஏற்று அதன்படி நடக்க அரசியல் கட்சித் தலைவர்கள் முன்வருவார்களா?
– பா.ஆகாஷ், பாலக்காடு-கேரளா.
பதில்: அப்படி முன்வந்தால், அதைவிட நாட்டிற்கான “நல்ல காலம்” வேறு ஏது?
கேள்வி: மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் மம்தா மீண்டும் அமோக வெற்றி பெற்று, முதலமைச்சராக பதவியில் அமர்வார் என்றும், பா.ஜ.க. மண்ணைக் கவ்வும் என்றும் திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் குணால் கோஷ் அவர்கள் உறுதிபடக் கூறியிருப்பது எதன் அடிப்படையில்?
-அ.அப்துல் அகத், அய்தராபாத்.
பதில்: அவர்கள் மேற்கு வங்க வாக்காளர்களான பெருமக்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை அடிப்படையில் இருக்கலாம்!
கேள்வி: தமிழ்நாட்டின் மொத்த உயர்க் கல்விச் சேர்க்கை விகிதம் 50 சதவீதம் என்பது தேசிய சராசரியைவிட 28.4 சதவீதம் அதிகமாக இருக்கும் நிலையில், ‘திராவிட மாடல்’ அரசின் ‘புதுமைப் பெண்’ திட்டத்தால் தமிழ்நாட்டில் உயர்க் கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருப்பது ‘காலம் தாழ்ந்தாலும் தந்தை பெரியார் கொள்கை வெற்றி பெற்றே தீரும்’ என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகக் கருதலாமா?
-சு.சின்னப்பொண்ணு, வாலாஜாபாத்.
பதில்: மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் கருதலாமே!

கேள்வி: “அரசு நிகழ்ச்சிகளில் முதலில் ‘வந்தே மாதரம்’ பாடல் பாடப்பட வேண்டும்” என்றும், “அதற்கு அனைவரும் எழுந்து நிற்க வேண்டும்” என்றும் ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், நாடெங்கும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களிடையே மட்டுமன்றி, மக்களிடையேயும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளதை அடுத்து ஒன்றிய அரசு அதனை திரும்பப் பெறுமா?
-ம.கண்மணி, காஞ்சிபுரம்.
பதில்: உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பும் அதற்குக் காரணமாக அமைவதால், நடக்கலாம். முன்னுதாரணம்: மூன்று விவசாயச் சட்டங்கள்.
கேள்வி: தந்தை பெரியார் பிறந்த மண்ணான தமிழ்நாட்டில் நடப்பதைப் போன்று, பெங்களூருவிலும் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக வளர்ப்பு மகனுக்கு முஸ்லீம் இணையர்கள் இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்திருப்பது மனிதநேயத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டல்லவா? இத்தகைய மனிதநேயச் செயல்களை சங்கிகள் அறியமாட்டார்களா?
-பொன்.முனுசாமி, பெங்களூரு.
பதில்: வெறித்தனம் மேலோங்கும்போது, மனிதநேயப் பார்வையை சங்கிகளால் ஒருபோதும் பெற முடியாதே!
கேள்வி: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியுடன் தே.மு.தி.க. இணைந்திருப்பது பற்றி…?
-ம.கண்ணன், மேல்மருவத்தூர்.
பதில்: மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டிய நல்ல திருப்பம்!
கேள்வி: அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள அமைப்புகள் உட்பட,
ஆர்.எஸ்.எஸ். 2,500-க்கும் மேற்பட்ட அமைப்புகளைக் கொண்டுள்ள நிலையில், அதன் நிதி ஆதாரம் குறித்து விளக்கம் தர வேண்டும் என்று கருநாடக அமைச்சர் பிரியங்க் கார்கே கேள்வி எழுப்பியிருப்பதற்கு உரியவர்கள் பதில் அளிப்பார்களா?
– ப.ஏட்டு ஏகாம்பரம், ஏனாத்தூர்.
பதில்: அது நியாயமான சட்டபூர்வக் கேள்வி.
கேள்வி: தமிழ்நாட்டில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு ஒன்றிய அரசு குடியுரிமை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியிருப்பதற்கு மனிதாபமான அடிப்படையில் பிரதமர் மோடி பரிசீலிப்பாரா?
-கோ.நண்பன், செங்கம்.
பதில்: பிரதமர் மோடி அவர்கள் இணக்கமாகவும், மனிதநேயத்துடனும் கவனித்து ஆவன செய்ய வேண்டிய முக்கியப் பிரச்சினை இது. நிச்சயம் பரிசீலித்து அம்மக்களை வாழ வைப்பது அவசர அவசியம் ஆகும்!
