முதலமைச்சரின் உணர்வுப் பூர்வமான உரையைப் பாராட்டி தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
“பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் சுயமரியாதை உணர்வும், சமூகநீதியும், பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் இன உணர்வும், மாநில சுயாட்சிக் கொள்கையும் கலைஞரின் சிறப்பான நிர்வாகமும், தொலைநோக்குப் பார்வையும் கொண்ட திராவிட மாடல் அரசைக் கடந்த அய்ந்தாண்டு காலத்தில் நடத்திக்காட்டி இருக்கிறோம்” என்ற மனநிறைவோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (20.2.2026) ஆற்றிய உரை அவரது பண்புக்கும், அரசியல் நாகரிகத்திற்கும் எடுத்துக்காட்டான நெகிழ்ச்சியான உரையாகும். அதே வேளையில் கொள்கை உறுதி மிக்க உரையுமாகும்.
அய்ந்தாண்டு காலத்தில் ஆட்சி நடத்திட உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன், அவையில் இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் நன்றி தெரிவித்து, அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து நயத்தக்க உரையை ஆற்றியுள்ளார். ஆளுநர் உள்ளிட்ட எவருடனும், கொள்கை எதிரிகளுடனும் கூட தனிப்பட்ட முறையில் நமக்கு எந்த கோபதாபங்களும் கிடையாது – கூடாது என்பதே திராவிட இயக்கத்தின் அடிநாள் தொட்டு நிலவிவரும் பண்பாகும். அதனை முதலமைச்சரின் உரை வெளிப்படுத்தியுள்ளது.
“நான் இந்த அய்ந்தாண்டு காலத்தில் எனக்கும், என் மனச்சாட்சிக்கும் மட்டுமே கட்டுப்பட்டு உழைத்திருக்கின்றேன். இன்னும் உழைக்கக் காத்திருக்கின்றேன். நாளைய தமிழ்நாடு நிச்சயம் நெஞ்சில் தாங்கி நம்மை வரவேற்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாளை நாங்கள் அமைக்கப் போகக்கூடிய திராவிட மாடல் 2.0 ஆட்சி, எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு இருக்கும்” என்று உறுதிபட அவர் தெரிவித்துள்ள கருத்து நம்பிக்கையூட்டக் கூடியதாகும்.
அவர் எத்தகைய தலைவர் என்பதற்கு மாநிலம் கடந்து இந்திய அளவில் அவருக்கு ஏற்பட்டுள்ள மதிப்பும், மகாராட்டிர மேனாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே போன்றோரின் கருத்துகளே சான்றுகளாகும்.
ஆளுமை மிக்க தலைவராக இந்தத் தேர்தலிலும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான அணி வெல்லும்! அவரே முதலமைச்சராக வருவார்! என்பது உறுதி! உறுதி! உறுதி!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
20.2.2026
