சென்னை, பிப்.20 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
“மகாராட்டிரத்தில் பிற்படுத்தப் பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக் கீட்டை நீக்கிய பா.ஜ.க.! இதைத்தான் இந்தியா முழுவதும் செய்யத் துடிக் கிறார்கள்.
அண்மையில் மறைந்த மகாராட்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் 2014-இல் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் முடிவை எடுத்தார்.
அவர் மறைந்த துயரம் அனைவரின் மனதில் இருந்தும் அகல்வதற்குள் அவர் எடுத்த முடிவை நீக்கியுள்ளது சிறுபான்மையினர் வெறுப்பில் ஊறிப்போன பா.ஜ.க.! இதுதான் இஸ்லாமிய மக்களுக்கு சிறுபான்மையினருக்கு எதிரான பாஜக அறிவித்திருக்கும் ரம்ஜான் பரிசா? தப்பித் தவறிக்கூட தமிழ்நாட்டுக்குள் தேசிய ஜனநாயகக் கூட்டணி வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா? வந்தால் நம் அனைவரின் இடஒதுக்கீடும் காலி!
இவர்களுக்கு ஒருநாளும் வளர்ச்சி அரசியல் தெரியாது; தெரிந்ததெல்லாம் மதவெறி சூழ்ச்சி அரசியல் மட்டும்தான். இத்தகைய வெறுப்பு எஞ்சின்கள் தமிழ்நாட்டில் ஓட அனுமதிக்க மாட்டோம்! “தமிழ்நாடா என்டிஏ-வா?” எனும் 2026 ஜனநாயகப் போரில் தமிழ்நாடே வெல்லும்!” என்று பதிவிட்டுள்ளார்.
