சென்னை,பிப். 19– சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது, ஒன்றிய அரசின் செயல் பாடுகளைக் கடுமையாக விமர்சித்ததோடு, தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பம்சங்கள் குறித்து விரிவாகப் பேசினார். அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் இருந்து…
“இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ்நாட்டில் இருந்துதான் எழுதப்பட வேண்டும்; அதேபோல் இந்தியாவின் வளர்ச்சியும் இங்கிருந்தே தொடங்க வேண்டும்”. திமுக அரசு செயல்படுத்தி வரும் முன்னோடித் திட்டங்கள் இன்று பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டியாகத் திகழ்வதே ‘திராவிட மாடல்’ ஆட்சிக்குக் கிடைத்த வெற்றியாகும்.
பாஜகவின் ‘வாஷிங் மிஷின்’ அரசியல் – பதிலடி
வாரிசு அரசியல் எனக் கூறுவது, எங்களை நேரடியாக எதிர்கொள்ளத் துணிவில்லாதவர்கள் கூறும் தேய்ந்துபோன குற்றச்சாட்டு.
திமுக மீது ஆதாரமற்ற புகார்களைக் கூறும் பாஜக, தன் கூட்டணியில் உள்ள ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை ‘வாஷிங் மிஷினில்’ போட்டு வெளுத்து எடுத்துவிட்டது போலப் புனிதர்களாகக் காட்டுகிறது.
திமுக மீது சுமத்தப் பட்ட எந்தவொரு ஊழல் புகாருக்கும் இதுவரை சிறு ஆதாரம்கூட இல்லை. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் என்பது வெறும் அரசியல் போட்டி அல்ல, அது “தமிழ்நாட்டுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையேயான போராக அமையும்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ் நாட்டில் உள்ள என்.டி.ஏ. கூட்டணி, ‘கட்டாயத்தின் பேரில் உருவாக்கப்பட்ட ஒரு துரோகக் கூட்டணி’.
பரிணமிக்கும் கொள்கைகளும் சமூக நீதியும்
சமூகநீதி, சமத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கமே திராவிட மாடல் ஆட்சியின் அச்சாணி, தமிழ்நாட்டின் கடைக்கோடி ஊரகப் பகுதிகள் வரை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், காலத்திற்கு ஏற்ப திமுகவின் கொள்கைகளும் பரிணமித்து வருகிறது. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
