புதுக்கோட்டை, பிப். 18- புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில இணை பொதுச் செயலாளர் ரகமதுல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
திராவிட மாடல் அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் மாற்றுத் திறனாளிகள் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
பள்ளிக்கல்வித்துறைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக இடைக்கால பட்ஜெட்டில் 48,534 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் கடந்த அய்ந்து ஆண்டுகளாக முதலமைச்சரின் காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், கல்லூரி கனவு, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன் உள்ளிட்ட முத்தான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர் நலம் பெற ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை திட்டமும், செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டந் தோறும் நூலகங்களை மேம்படுத்திஅறிவார்ந்த தமிழ்ச் சமூகத்தை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் நிறுவப்பட்டு சென்னையில் உள்ள மாநில தகைசால் பள்ளியுடன் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் மாதிரி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான வாய்ப்புகளை உருவாக்குதல் அவற்றை அணுக தேவையான கல்வி மற்றும் கலை ஆளுமைத் திறன் பயிற்சி போன்றவற்றை வழங்குதல் ஆகியவை திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். இத்திட்டத்தின் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்தம் 2358 மாணவர்கள் 93 முன்னணி கல்வி நிறுவனங்களில் 50 விதமான பிறைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மருத்துவத் துறைக்கு ரூ.22,090 கோடியும், தொழிலாளர் நலத் துறைக்கு ரூ.1,996 கோடியும் நிதி ஒதுக்கீடும், தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட அரசுப் பணியாளர் ஓய்வூதியத் திட்டத்திற்கு 11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோருக்கு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
