
திருச்சி, பிப்.18- பள்ளி வாழ்க்கை என்பது வெறும் பாடம் சார்ந்தது மட்டுமல்ல, அது வாழ்நாள் முழுமைக்குமான நட்பையும் நினைவுகளையும் சுமந்தது என்பதை மெய்ப்பிக்கும் வகையில், திருச்சி,பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பிரியாவிடை விழா நடைபெற்றது.
கடந்த 6.6.2026 அன்று மாலை 4:00 மணியளவில் நாகம்மையார் அரங்கத்தில் பள்ளிப் பருவ நினைவுகளுடன் பிரியாவிடை. பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் நெகிழ்ச்சியான விழா ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.
ஆரம்பக்கால தயக்கங்கள் நீங்கி, ஒரு குடும்பமாக வளர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவர்களை வழிநடத்தும் பொறுப்பை 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஏற்றிருந்தனர்.
நிகழ்வின் முதலாவதாக பதினோராம் வகுப்பு மாணவி சி.மதுசிறீ வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து, 11ஆம் வகுப்பு மாணவர்கள் சே.ஆல்வின் ஜெரோன் மற்றும் பி.ஆதில் சாமி ஆகியோர் தங்களின் உரையின் வாயிலாகப் பள்ளி வளாகத்தில் கழித்த தருணங்களை நினைவுகூர்ந்தனர்.
மாணவர்கள் பி.நிகிதா மற்றும் இ.மணீஷ் ஆகியோர் வாசித்த கவிதைகள், பிரியும் தருணத்தின் கனத்தை உணர்த்தின. எஸ்.யுவேரா மற்றும் ஜெ.முகமது பாசில் ஆகியோர் ஆங்கிலத்தில் தங்களின் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
11-ஆம் வகுப்பு மாணவிகளின் குழுப்பாடல் மற்றும் எஸ்.யுகாவின் தனிப்பாடல் அரங்கத்தை அமர்க்களப்படுத்தியது. மாணவிகளின் நடன நிகழ்ச்சி விழாவிற்கு உயிரோட்டம் அளித்தது.
அன்பின் அடையாளமாக 11ஆம் வகுப்பு மாணவர்கள் வழங்கிய நினைவுப் பரிசுகளை 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.
விழாவின் சிகரமாக, கடந்த சில ஆண்டுகளின் ஒளிப்படத் தொகுப்புகள் அடங்கிய ஒளிப்படக் காட்சி திரையிடப்பட்டபோது மாணவர்கள் பலரும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.12-ஆம் வகுப்பு மாணவி ஈழமலர் தனது உரையில், ஆசிரியர்களின் வழிகாட்டுதலுக்கும் பள்ளி அளித்த நற்பண்புகளுக்கும் நன்றி தெரிவித்தார்.
கல்விப் பயணத்தின் அடுத்த கட்டமான பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு வாழ்த்துகள் கூறப்பட்டு, தொடர்ந்து, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கித் தங்கள் நன்றியை வெளிப்படுத்தியது உணர்வுப்பூர்வமான தருணமாக அமைந்தது.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவி எஸ்.ரம்யாவின் நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது.
பிரியாவிடை விழாவை முன்னிட்டுப் 12ஆம் வகுப்பு மாணவர்கள் சார்பில் 11 ஆம் வகுப்பு மாணவர்கள், அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் உள்ளிட்டோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
