இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 650 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னை அலுவலகத்தில் மட்டும் 53 காலிப்பணியிடங்கள் உள்ளன.
ஒரு விண்ணப்பதாரர், ஒரே ஒரு அலுவலகத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எந்த மாநில அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ அந்த மாநிலத்தின் வட்டார மொழியில் பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில், வட்டார மொழியில் தகுதித் தேர்வு நடத்தப்படும்.
உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 650
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.02.2026 அன்று 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும்
எஸ்.சி, எஸ்.டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகள் (PWD) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது வரம்பில் சலுகை உண்டு.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ. 58,514
தேர்வு முறை: இதில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் வட்டார மொழி தகுதித் தேர்வு மூன்று படிநிலைகள் உண்டு. இந்த பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். எழுத்துத் தேர்வு கிடையாது.
முதல்நிலைத் தேர்வு: முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English language – 30), திறனறிதல் (Reasoning ability – 35) மற்றும் கணிதத்தில் (Numerical ability – 35) இருந்து 100 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 1 மணி நேரம். முதல்நிலைத் தேர்வு தகுதித் தேர்வு மட்டுமே. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுவோர் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
முதன்மைத் தேர்வு: முதன்மைத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (40), திறனறிதல் (40), கணிதம் (40), கணினி அறிவு (40), மற்றும் பொது அறிவு அல்லது வங்கி தொடர்பான கேள்விகள் (General/ Financial Awareness) (40) என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 2 மணி நேரம் 15 நிமிடங்கள். இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலே வேலை கிடைக்கும்.
முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். சான்றிதழ் சரி பார்ப்புக்கு பின் வட்டார மொழி தகுதித் தேர்வு நடைபெறும். பின்னர் இறுதி தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டு, காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு இணையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.rbi.org.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.03.2026
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, ஓ.பி.சி மற்றும் இ.டபுள்யூ.எஸ் பிரிவினருக்கு ரூ.450 ஆகவும், எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவுகளுக்கு ரூ.50 ஆகவும் உள்ளது.
