சென்னை, பிப். 16- இம்மாத இறுதிக்குள் சென்னையில் மேலும் 245 மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க, டீசல் பேருந்துகளுக்குப் பதிலாக மின்சாரப் பேருந்துகளைப் பயன்படுத்தத் தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. அதன்படி, கடந்த ஜூன் மாதம் சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டது. வியாசர்பாடி பணிமனையில் இருந்து தொடங்கப்பட்ட இந்த பேருந்து சேவை, தொடர்ந்து பெரும்பாக்கம், பூந்தமல்லி ஆகிய பணிமனைகளில் இருந்தும் இயக்கப்பட்டு வருகின்றன.
625 மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், தற்போது வரை 380 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மீதமுள்ள 245 பேருந்துகளை விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவர மாநகர் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியுள்ளதாவது: “பல்லவன் இல்ல மத்திய பணிமனையில் மின்சாரப் பேருந்துகளுக்கான கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளன. 245 மின்சாரப் பேருந்துகள் தயாரிப்புப் பணிகள் முடிந்துவிட்டன; விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். பிப்ரவரி இறுதிக்குள் இவை பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும். இதில் 145 பேருந்துகள் பல்லவன் இல்லப் பணிமனையுடனும், 100 பேருந்துகள் தண்டையார்பேட்டை பணிமனையுடனும் இணைக்கப்படும்” என்றார்.
இரண்டாவது கட்டமாக, மேலும் 600 மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையில் மாநகர் போக்குவரத்துக் கழகம் ஈடுபட்டு வருகிறது.
