சென்னை, பிப். 16- ‘பன்னாட்டு அடையாளங்களுக்கு வர்ணம் பூச நினைக்கிறார்கள். வள்ளலாரின் நோக்கங்களைச் சிதைக்க அனுமதிக்க மாட்டோம்’ என்று சென்னையில் நடந்த அனைத்துலக வள்ளலார் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயில் மய்தானத்தில் நடைபெற்று வரும் அனைத்துலக வள்ளலார் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (15.2.2026) தொடங்கி வைத்தார்.
இந்த சிறப்பு மாநாட்டில் பல்வேறு பெரியோர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். அதனை தொடர்ந்து வள்ளலார் பன்னாட்டு மய்யத்தின் முடிவுற்ற கட்டுமானப் பணிகளைக் காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு “வள்ளலார் நெடுஞ்சாலை” என புதிதாக பெயர் சூட்டி பெயர்ப்பலகையை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழ் சமூகத்தில் உதித்த புரட்சியாளர் வள்ளலார். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று சொல்லி உலகிற்கே ‘தனிப்பெரும் கருணை’ என்ற அன்பு வழியை போதித்தவர் வள்ளலார்.
அவர் வழியில்தான் திராவிட மாடல் அரசும் ஏழை எளிய மக்களின் பசியை ஒழிக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
வள்ளலாரின் உயரிய கருத்துகளை, வாழ்வியல் நெறிகளை உலகெங்கும் போற்றிடும் வகையில் அனைத்துலக வள்ளலார் மாநாடு நடைபெறுகிறது.
ரூ.8,000 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்டு சாதனை படைத்துள்ளோம். 864 கோயில்களில் ஒரு வேளை அன்னதான திட்டம் அமலில் உள்ளது. வள்ளலார் கோட்பாடுகளுக்கு செயல் வடிவம் கொடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:-
அனைத்துலக வள்ளலார் மாநாட்டின் நினைவாக காஞ்சி ஏகாம்பரநாதர் பள்ளியில் நினைவுத்தூண் அமைக்கப்படும்.
* வடலூரில் சன்மார்க்க பயிற்சிப் பள்ளி அமைக்கப்பட்டு அப்பள்ளியில் திருவருட்பா இசை பயிற்சியும் அளிக்கப்படும்.
* வடலூரில் வள்ளலார் பெயரில் மூலிகைத் தோட்டம் அமைக்கப்படும்.
* Spiritual Alchemy என்ற வள்ளலாரின் புத்தகம் அறநிலையத்துறையின் பதிப்பகத்தின் மூலமாக வெளியிடப்படும்.
* வள்ளலார் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் 3 நாட்கள் விழா நடத்தப்படும்.
* மேட்டுக்குப்பம், மருதூர் மற்றும் கருங்குழி ஆகிய ஊர்களில் வள்ளலார் பெயரில் அன்னதானக் கூடங்கள் திறக்கப்படும்.
* கடலூர் ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் அமைய உள்ள பூங்காவிற்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும்.
* சென்னையில் அறநிலையத்துறை வளாகத்தில் வள்ளலார் ஆய்வு மய்யம் அமைக்கப்படும்.
