கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரப் பிரதேச மாநிலம் சம்பலில் மசூதி உள்ளே கோவில் ஒன்று உள்ளது என்று கூறி ஹிந்துத்துவ அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர்.
அப்போதிருந்தே சம்பல் தலைப்புச் செய்திகளில் அடிக்கடி இடம் பெற்றுவருகிறது,
இந்த நிலையில், 3.2.2026 அன்று காலை சம்பல் நயாபஜார் பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்ற பூசாரி கோவிலின் முன்பு கோழிக்கால் ஒன்று இருப்பதைக் கண்டு உடனடியாக அவ்வூர் பஜ்ரங் தள் அமைப்பினருக்கு தகவல் கொடுத்தார்.
சும்மா விடுவார்களா? உடனடியாக மத வன்முறையைத் தூண்டும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் அச்சாகியது.
இந்த நிலையில் இது தொடர்பாக காவல் துறையினரிடமும் புகார் அளிக்கப்பட்டது. சம்பலில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
காவல் துறையினர் நகர் முழுவதும் குவிந்தனர். இந்த நிலையில் காவல்துறை கோவிலுக்கு முன்பாக வைக்கப்பட்ட கண் காணிப்புக் காமிராவை ஆய்வு செய்தபோது, ஒரு காக்கா (ஆமாங்க, சாதாரண காக்கா தான்!) வாயில் கோழிக்காலோடு பறந்து வந்து அங்கிருந்த மின்சார வயரில் அமர்ந்தது. நிதானமாக அந்த ‘லெக் பீஸை’ கொத்தித் தின்ன முயன்ற போது, கைநழுவி (சாரி, வாய் நழுவி) கோழிக்கால் கோவில் வாசலில் விழுந்தது. காக்காவும், “ச்சே… இன்னைக்கு நமக்கு லெக் பீஸ் குடுத்து வைக்கல” என்று அந்தக் காகமும் இந்தக்கால் போனால் போகிறது வேறு காலைப் பார்க்கலாம் என்று கிளம்பிவிட்டது போலும்
இதனை அடுத்து ‘நிகழ்வு தற்செயலானது’ என்று அறிந்துகொண்ட காவல்துறையினர் ஹிந்துத்துவ அமைப்பினரையும் பஜ்ரங் தள் மற்றும் கோவில் நிர்வாகிகளையும் அழைத்து நிகழ்வை காண்பித்து, “இதோ அந்தக் காக்காதான் சதிகாரன். விரைவில் அந்தக் காக்காவைப் பிடிக்க முயற்சிப்போம். இதில் சதிச்செயல் ஒன்றும் இல்லை” என்று கூறி அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டனர்.
ஆனால் இந்த நிகழ்வு நடந்துகொண்டு இருக்கும் போதே பஜ்ரங் தள் அமைப்பினர் கைப்பிரதிகளை நகரில் பல பகுதிகளில் விநியோகித்துவிட்டனர். காவல்துறையின் ஆலோசனைக்குப் பிறகு வெளியே வந்த சில ஹிந்துத்துவ அமைப்பினர் இது பாகிஸ்தானில் இருந்துவந்த காக்காவாக இருக்கும் என்று கூறிக்கொண்டே சென்றனர்.
அதற்குள் டில்லி செய்தியாளர்கள் காமிரா சகிதம் சம்பல் நோக்கி புறப்பட்டுவிட்டனர்.
