இந்திய விடுதலைப் போர் என்றாலே சில குறிப்பிட்ட பெயர்கள் மட்டுமே நம் நினைவுக்கு வருகின்றன. ஆனால், வரலாற்றின் பக்கங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்ட பல மாவீரர்கள் உண்டு. அதில் மிக முக்கியமானவர் 1857-ஆம் ஆண்டு சிப்பாய் கலகத்தின் போது ஆங்கிலேயப் படைகளைத் தனி ஒருவனாக நடுங்க வைத்த பன்கே சமார் (Banke Chamar).
போர்க்களத்தில் ஒரு புயல்
உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பன்கே சமார், பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராகக் கடும் கிளர்ச்சியில் ஈடுபட்டார். சிப்பாய் கலகம் வெடித்தபோது, மார்ச் 1857இல் அவர் தலைமையிலான வீரர்கள் ஆங்கிலேயப் படைகளுக்குப் பெரும் சவாலாகத் திகழ்ந்தனர்.
ஜான்பூர் பகுதியில் ஆங்கிலேயர்களின் நிர்வாகத்தையும், ராணுவ நகர்வுகளையும் முற்றிலுமாக முடக்கியவர் பன்கே. இவரது வீரத்தைக் கண்டு அஞ்சிய ஆங்கிலேய அரசு, இவரைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு அன்றைய காலத்திலேயே 50,000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. 19-ஆம் நூற்றாண்டில் இவ்வளவு பெரிய தொகை ஒருவருக்கு அறிவிக்கப்பட்டது என்றால், ஆங்கிலேயர்களுக்கு அவர் எந்த அளவுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்திருப்பார் என்பதை நாம் உணரலாம்.
நட்பின் பெயரால் நடந்த துரோகம்!
வரலாற்றில் வீரத்தினால் வீழ்த்த முடியாத மாவீரர்கள் பலரும் துரோகத்தினால் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள். பன்கே சமாருக்கு மிக நெருங்கிய நண்பராக நடித்தவர் பார்ப்பனரான ராம் சங்கர் திவாரி. 50,000 ரூபாய் பரிசுத் தொகைக்கு ஆசைப்பட்டு, தனது நண்பன் என்றும் பாராமல் பன்கே சமார் பதுங்கியிருந்த இடத்தைப் பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் காட்டிக்கொடுத்தார்.
ராம் சங்கர் திவாரி காட்டிக்கொடுத்ததோடு நிறுத்தாமல், பன்கே சமாருக்கு மரண தண்டனை (தூக்கு) விதிக்கப்பட வேண்டும் என்று ஆங்கிலேய அதிகாரிகளிடம் தீவிரமாகப் பரிந்துரைத்ததாகவும் வரலாற்றுத் தரவுகள் கூறுகின்றன.
இறுதி நிமிடங்கள்
நண்பனின் துரோகத்தால் கைது செய்யப்பட்ட பன்கே சமார், ஆங்கிலேயர்களால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதும் தனது சாவைப் பற்றி கவலைப்படாமல் விசாரணை அதிகாரியின் முகத்தில் காரி உமிழ்ந்து, “நான் இந்த மண்ணிலிருந்து வந்தேன். இந்த மண்ணிற்கே விதையாகிறேன். இந்தப் பேறு ஆங்கிலேயரான உனக்குக் கிடைக்காது” என்று கூறி தூக்குக் கயிற்றைத் தானே கழுத்தில் மாட்டிக்கொண்டார். தனது கடைசி மூச்சு வரை அவர் இந்திய மண்ணின் சுதந்திரத்திற்காகவே துடித்தார்.
சிவாஜியை வீழ்த்த முயன்ற கிருஷ்ண பாஸ்கர் குல்கர்னி குறித்து, பகத் சிங்கின் தூக்குக்கு காரணமான சாட்சி கூறிய பார்ப்பனரான பி.என்.கோஷ் குறித்து நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், தன் உயிரைப் பணையம் வைத்துப் போரிட்ட ஒரு வீரனை, உடன் இருந்தே காட்டிக்கொடுத்த ராம் சங்கர் திவாரி போன்றவர்களின் பெயர்கள் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் மறைந்து கிடக்கின்றன. சுதந்திர இந்தியாவின் வரலாறு என்பது தியாகங்களால் மட்டுமல்ல, துரோகங்களாலும் எழுதப்பட்டது. பன்கே சமார் போன்ற விளிம்புநிலை மக்கள் இந்திய விடுதலைக்காகச் செய்த தியாகம் இன்றும் முழுமையாக வெளிச்சத்திற்கு வரவில்லை.
