கார்ல் மார்க்ஸ்
மனிதகுலச் சிந்தனைமீது
மேலதிகத் தாக்கம் செலுத்திய
மெய்யாளன்
பூகம்பம் இல்லாமல்
பூமியை அசைத்தவன்
உழைப்பால் உலகை
ஒன்றுபடுத்த நினைத்து
நாடற்றவனாய்ச்
செத்துப்போனவன்
அவன் எலும்புகளை
வறுமையின் ரம்பப் பற்கள்
அறுத்த போதும்
“தத்துவத்தின் வறுமை”
எழுதியவன்
ஆடைகளை
அடமானம் வைத்து
உழைக்கும் வர்க்கத்தின்
மானம் காத்தவன்
குழந்தையின் காலணிகளை
அஞ்சல் செலவுக்கு
அடமானம் வைத்தவன்
மதங்களுக்கெதிராய்
மதமற்ற மதம் கண்டவன்
அறிவுக் காதல்
அவன்மீதெனக்கு
31.05.1993
லண்டன் ஹைகேட்டில்
மார்க்ஸின்
கல்லறை கண்டடைந்தேன்;
முட்புதர் களைந்து
மலர் வளையம் வைத்தேன்
கல்லறையில் உள்ளது
மார்பளவுச் சிலைதான்;
கன்னிமாராவில் நிற்பது
முழு உருவச் சிலை
நன்றி!
– கவிப்பேரரசு வைரமுத்து
