சென்னை, பிப். 13– கும்மிடிப்பூண்டி, வடசென்னை, தென்சென்னை, ஆவடி, திருவொற்றியூர், தாம்பரம், சோழிங்கநல்லூர் மாவட்ட கழக அமைப்புகளின் கலந்துரையாடல் கூட்டம் 9.2.2026 அன்று மாலை 5.45 மணிக்கு சென்னை பெரியார் திடல் – அன்னை நாகம்மையார் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்தார். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் வீ.அன்புராஜ் பங்கேற்று கருத்துரையாற்றினார்.

கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, மாநில கழக ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், மாநில மகளிரணி துணைச் செயலாளர் வீ.கா.ரா.பெரியார் செல்வி, மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் ஆகியோர் தஞ்சை இருபெரும் மாநாட்டில் தோழர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டுமென்பது பற்றியும், மாநாட்டுப் பணிகள் குறித்தும் பேசினர்.
ஏழு மாவட்டங்கள்
தாம்பரம், தென்சென்னை, வடசென்னை, கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர், திருவொற்றியூர் கழக மாவட்டங்களின் தலைவர்கள் ப.முத்தையன், இரா.வில்வநாதன், வழக்குரைஞர் தளபதி பாண்டியன், புழல் த.ஆனந்தன், வே.பாண்டு, வெ.மு.மோகன், ஆவடி மாவட்ட கழக செயலாளர் க.இளவரசன், நீலாங்கரை மாவட்ட கழக காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன் ஆகியோர் பேசினர்.
மாவட்டத் தலைவர்கள் உரையாற்றும்போது, மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து அணிகளின் கழகத் தோழர்கள் பெருமளவில் மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதை – எண்ணிக்கையைக் குறிப்பிட்டனர். மாநாட்டை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சுவரெழுத்துப் பணிகள் பற்றியும், பேருந்து, வேன் ஆகியன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறித்தும் இக்கலந்துரையாடல் கூட்டத்தில் எடுத்துக் கூறினர்.
இக்கூட்டத்தில் பங்கேற்று கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் கருத்துரை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது,
தமிழர் தலைவரின் அறிவிப்பு
குறுகிய காலமே உள்ள நிலை என்றாலும், கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பிப். 21 அன்று தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் என்று அறிவித்தார். அறிவித்தவுடன் தஞ்சை மற்றும் சுற்றியுள்ள 11 மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் மாநாட்டுப் பணிகளை உடடினயாகத் தொடங்கி விட்டனர். மும்முரமாக மாநாட்டுப் பணிகள் நடந்தவாறு உள்ளன.
எழுச்சிக்குக் குறைவில்லை
செங்கற்பட்டு – மறைமலைநகரில் நடந்த சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டையும், மகத்தான பேரணியையும் கண்டவர் அனைவரும் திகைத்து நின்றனர். சற்றும் எழுச்சிக்குக் குறைவில்லை.
தஞ்சை மாநாட்டிற்கு சென்னை மாநகரைச் சார்ந்துள்ள இந்த ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் பெருமளவில் வரவேண்டும். தோழர்கள் – ஆதரவாளர்கள், நண்பர்களோடு மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். மாநாட்டுப் பேரணி சிறப்பாக நடைபெறும். பேரணியில் ஒவ்வொரு கழக அணியினர் மட்டுமே உள்ளவாறு – அணி அணியாக வரவேண்டும். அதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்.
இளைஞர்கள் ஆர்வத்தோடு இந்த இயக்கத்தில் இணை கின்றனர். புதிது புதிதாகத் தோழர்கள் வந்து இணைகின்றனர். இயக்கத்திற்கு ஆதரவு பெருகி வருகின்றது.
மாநாட்டுப் பிரச்சாரம் செய்வீர்
கழகத் தோழர்கள் சுவரெழுத்து, பதாகைகள், டிஜிட்டல், சோசியல் மீடியா, கைப்பேசிப் பதிவுகள் மூலமாக இந்த மாநாடு குறித்தும், மாநாட்டில் பங்கேற்க வேண்டிய அவசியம் பற்றியும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
அண்மையில் தஞ்சைக்குச் சென்றேன். மாநாடு நடைபெறுகின்ற தஞ்சை திலகர் திடல் – அண்ணா அரங்கம் ஆகியவற்றுக்கு கழகப் பொறுப்பாளர்களோடு சென்று – பார்வையிட்டு மாநாட்டுப் பணிகள் குறித்து கலந்துரையாடினோம். மாநாட்டில் பங்கேற்க இருக்கின்ற கழகத் தோழர்களுக்கு உரிய வசதிகள் செய்யப்படுவது பற்றியும் ஆலோசனை நடைபெற்றது.
அந்த மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் உற்சாகமாகப் பணி செய்து வருகின்றனர். அந்தத் தோழர்களோடு நானும் இணைந்து தஞ்சைக்கு வருகின்ற உங்களை – கழகத் தோழர்களை வரவேற்பதற்கென்று ஆவலாக காத்திருக்கின்றேன். அனைவரும் திரண்டு வாருங்கள் என்று அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
தொடர்ந்து நிறைவாக கழகத் துணைத் தலைவர் உரையாற்றினார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது,
கழகத் துணைத் தலைவர் உரை
முக்கியமானதொரு காலத்தில் நம்முடைய கழகத் தலைவர் அறிவித்துள்ள மாநாடுதான் – தஞ்சையில் நடைபெறப்போகின்ற மாநாடு.
இந்த மாநாட்டில் இளைஞர்கள் பெருவாரியாகக் கலந்து கொள்ள வேண்டும். புதிய தோழர்கள் – பொது மக்களை மாநாட்டில் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும். அதற்கேற்றாற் போன்று மாநாட்டினை நல்ல முறையில் விளம்பரம் செய்ய வேண்டும்.
வாழ்க்கை முறை
திராவிடர் கழகம் என்பதே கூட வாழ்க்கை முறைதான். ஒழுக்கம் – நெறி – கொள்கைப் பற்று – மனிதநேயம் இவை பின்னிப் பிணைந்ததுதான் திராவிடர் கழகம். புதிய தோழர்கள் பங்கேற்கும்போது இவற்றின்பால் நிச்சயம் ஈர்க்கப்படுவார்கள். நம்முடைய பயனுக்காக அல்ல. மக்களிடம் இந்தக் கொள்கை ஆழமாக வேரூன்றுகின்ற போதுதான் அவர்களின் வாழ்க்கை முறையில் நல்ல மாற்றத்தைப் பெற முடியும்.
ஆரிய ராஜ்ஜியம் வர விடக்கூடாது
தமிழ்நாடு இந்த இயக்கத்தை நம்பித்தான் இருக்கின்றது. “பெரியார் பிம்பத்தை உடைத்துக் காட்டுவோம்” என்று துடியாய்த் துடித்து வருகின்றார்கள். பாசிச பா.ஜ.க. வீழ்த்தப்பட வேண்டும். இந்த மண்ணில் கோலோச்ச நினைக்கின்ற ஆரிய ராஜ்ஜியம் வரவிடக் கூடாது.
செங்கற்பட்டு – மறைமலைநகர் மாநாட்டில் இளைஞர்கள் திரண்டு வந்து கலந்து கொண்டார்கள். சுயமரியாதைப் பிரச்சாரத்திற்கு சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தையும், அழுத்தத்தையும் ஏற்படுத்திய மாநாடு அது.
தஞ்சை மாநாடு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் இரண்டு மாதமே உள்ள நிலையில் நடக்க இருக்கின்ற மாநாடு. கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் என்ன முடிவெடுத்து, அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் பரவலாக எழுந்துள்ளது.
பிரதமர் மோடி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தும் தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கடுமையாக முயற்சி செய்வார்கள்.
மாற்றம் வரும்
மீண்டும் தி.மு.க. ஆட்சி என்பதற்கு கழகத் தோழர்கள் இளைஞர்கள் கடுமையாகப் பாடுபட வேண்டும். 2026இல் தி.மு.க. வெற்றி என்பது அகில இந்திய அளவில் நிச்சயம் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும்.
தஞ்சை மாநாடு நமது கொள்கை – இலட்சியத்திற்கு வலிமை ஏற்படுத்துகின்ற மாநாடு. மாநாட்டுப் பணிகளைச் சிறப்பாகச் செய்யுங்கள். மாநாட்டிற்குத் திரண்டு வாருங்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
வீ.அன்புராஜ் அவர்களுக்குப் பாராட்டு
அண்மையில், சென்னை பல்கலைக்கழகத்தில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. கலந்துரையாடல் கூட்டத்தில் இதனைக் குறிப்பிட்டு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பாராட்டிப் பேசியபோது, கூட்டத்தில் பங்கேற்ற கழகத் தோழர்கள் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அவருக்கு வாழ்த்து கூறினர். இதற்காக அம்பத்தூர் கழகத் தோழர் ஆ.வெ.நடராஜன் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் ரூ.500 நன்கொடை வழங்கினார்.
பெரியார் பிஞ்சு யாழ் தமிழ் கணீரென்ற குரலில் கடவுள் மறுப்புக் கூறியதை வெகுவாகப் பாராட்டிய கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் முன்னிலையில், நீலாங்கரை
ஆர்.டி.வீரபத்திரன் யாழ் தமிழுக்கு ரூ.500 பரிசு அளித்தார்.
தஞ்சை மாநாட்டில் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த கழகத் தோழர்கள் தனிப் பேருந்து, தனி வேன், தொடர் வண்டிகள், அரசு-தனியார் பேருந்துகளில் என அனைத்து வகை வாகனங்களிலும் பயணித்துப் பெருந்திரளாகக் கலந்து கொள்வது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பங்கேற்றோர்
திராவிட தொழிலாளர் பேரவைத் தலைவர் கருப்பட்டி சிவா, புதுமை இலக்கியத் தென்றல் தலைவர் செல்வ.மீனாட்சிசுந்தரம், மாநில கலைத்துறை செயலாளர் மாரி.கருணாநிதி, வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், சோழிங்கநல்லூர் மாவட்ட செயலாளர் க.தமிழினியன், நெய்வேலி வெ.ஞானசேகரன், கி.இராமலிங்கம், நா.பார்த்திபன், ப.கோபாலகிருஷ்ணன், கோ.தங்கமணி, ந.கார்த்திக், க.துரை, வீ.கே.ஆர். பெர்னாட்ஷா, தங்க.தனலட்சுமி, த.மரகதமணி, மு.செல்வி, த.இளவரசி, எஸ்.நூர்ஜஹான், வழக்குரைஞர் துரை.அருண், கரு.அண்ணாமலை, கோ.வீ.ராகவன், மு.சண்முகப்பிரியன், க.சுப்ரமணியன், சா.தாமோதரன், ச.மாரியப்பன், இரா.இரவி, புழல் மு.உதயகுமார், ஆ.இர.சிவசாமி, தாம்பரம் சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், கூடுவாஞ்சேரி மா.இராசு, தனசேகரன், பூவை. க.தமிழ்ச்செல்வன், க.ச.பெரியார் மாணாக்கன், வை.கலையரசன், ம.சக்திவேல், இரா.கலைச்செல்வன், இ.தமிழ்மணி, மு.நித்தியானந்தன், சு.வெங்கடேசன், பி.சி.ஜெயராமன், மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.
நிறைவாக, தென்சென்னை மாவட்ட கழக செயலாளர் செ.ர.பார்த்தசாதி நன்றி கூறினார்.
