தஞ்சாவூர், பிப்.12- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி அனுசரிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9ஆம் நாள் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் 09.02.2026 அன்று காலை 11.00 மணியளவில் வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு நாளில் கீழ்க்கண்டவாறு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
“இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால், கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்திற் கொண்டு, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளங்கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன் என்றும், எந்தத் தொழிற்சாலையிலும் தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து பணியமர்த்துவதைத் தவிர்க்க வலியுறுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்விற்காகப் பணியாற்றுவேன் என்றும், இந்திய அரசமைப்புச் சட்டம் வகை செய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு. கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தைச் சீரிய முறையில் செயற்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயற்படுவேன் என்றும், நான் உளமார உறுதி கூறுகிறேன்”.
இந்நிகழ்வில் இக்கல்லூரியின் முதல்வர் க.ப.வெள்ளியங்கிரி, துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா, முதன்மையர் கோ.இராஜாராமன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஞா.செங்கொடி, பெ.மாதவன், ரெ.நடராஜன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
