சட்ட விரோத கோயில்கள்!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் கோயில் கட்டும் பணி நடைபெறுகிறது. எதிர்ப்புத் தெரிவித்தும் பணிகள் நடைபெறுகின்றன.
தமிழ்நாடு அரசு ஆணையிருந்தும், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற ஆணைகளும், தீர்ப்புகளும் திட்டவட்டமாக இருந்தும், அரசுக்குச் சொந்தமான இடங்களில் அத்துமீறிக் கோயில்களும், சம்பந்தப்பட்ட கோயில் சாமிகளின் பெயர்களில் வளைவுகளும் கட்டப்பட்டு வருகின்றன.
பெரியார் நினைவு சமத்துவ புரங்களில் எந்த மத வழிபாட்டுச் சின்னங்களும் கட்டக்கூடாது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஆணை தெளிவாகவே உள்ளது.
பெரியார் நினைவு சமத்துவ புரங்களில் குடியேறும் பயனாளிகள், ‘‘நாங்கள் ஜாதி, மத வேறுபாடுகளைக் கடைப்பிடிக்க மாட்டோம்; பொது இடங்களில் வழிபாட்டுத் தலங்களைக் கட்டமாட்டோம்’’ என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மொத்தம் 10 சமத்துவ உறுதி மொழிகள் எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று திட்டவட்டமான ஆணை இருக்கிறது. இந்த விதிகள் மீறப்படும் பட்சத்தில், மாவட்ட ஆட்சியரே சம்பந்தப்பட்ட வழிபாட்டுச் சின்னங்களை அகற்றலாம்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.இராமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய சென்னை உயர்நீதிமன்ற அமர்வு 2025 ஜனவரியில் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கினார்கள்.
அரசு பொது இடங்களில் கோயில் கட்டினால், அதனை அகற்றவேண்டும் என்பதுதான் அந்தத் தீர்ப்பு. 2021 ஆம் ஆண்டில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியமும், 2024 இல் நீதிபதி என்.ஆனந்தவெங்கடேசும் கூட இதுபோன்ற தீர்ப்புகளை வழங்கியுள்ளனர்.
உயர்நீதிமன்றம் மட்டுமல்ல; உச்சநீதிமன்றமும் 2009 மற்றும் 2013 இலும் இதேபோன்ற தீர்ப்பை உறுதி செய்துள்ளது. (Union of India Vs Bharat Dogra).
இவ்வளவுத் தெளிவாக சட்ட திட்டங்களும், தீர்ப்புகளும் தெளிவாக இருந்தும், எந்தத் தைரியத்தில் அரசு பொது இடங்களிலும், பூங்காக்களிலும், நடைபாதைகளிலும் கோயில்களைக் கட்டுகிறார்கள்? இதில் மோசமானது என்னவென்றால், அரசு அலுவலக வளாகங்களிலேயே கோயில் கட்டுவதுதான்!
இதை அனுமதித்துக் கொண்டே போனால், போக்குவரத்து நெருக்கடிகளும், விபத்துகளும் நடக்காதா என்பதையும் சிந்திக்கவேண்டும்! சட்ட மீறலை ஊக்குவிக்கும் மனோபாவத்தையும் ஏற்படுத்தும்.
– மயிலாடன்
