சென்னை, பிப். 11- பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தனியார் கட்டுமான நிறுவனம் குடியிருப்பு வளாகம் கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு தனியார் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அதிமுக வழக்குரைஞர் அணி நிர்வாகி ஜெ.பிரஷ்நேவ் மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த உயர்நீதிமன்றம், அங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்திருந்தது. தலைமை நீதிபதி எம்.எம்.சிறீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று (10.2.2026) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பின்வரும் வாதங்களை முன்வைத்தார்:
நாடு முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பது தொடர்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாட்டில் உள்ள சதுப்பு நிலங்களைத் துல்லியமாக வரையறை செய்து தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளது.
அரசுத் தரப்பு வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், “சதுப்பு நிலப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, அதற்கு இணையான ஒரு விசாரணையை உயர்நீதிமன்றத்தில் நடத்த முடியாது” என்று குறிப்பிட்டனர். மேலும், மனுதாரர்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், இரு தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
பிச்சைக்காரர் கையில் ஆங்கில நாவல்…
சமூக வலைதளங்களைக் கலக்கிய ஒளிப்படம்
கடந்த வாரம் பிச்சைக்காரர் ஒருவர் ஆங்கில நாவல் படிக்கும் ஒளிப்படம் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்தது. மும்பையில் சாலையோரம் கந்தல் ஆடையில் படுத்திருக்கும் அந்த நபர், ஒரு கையில் ஆங்கில நாவலும், மறு கையில் பீடியும் வைத்திருக்கிறார். சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இந்த போட்டோ சில மணி நேரங்களிலேயே வேகமாகப் பரவியதுடன் பார்வையாளர்களின் பேசுபொருளாகவும் மாறியது. வாசிப்பு ஆர்வத்தை சிலர் பாராட்ட, சிலர் அவருடைய ஏழ்மை நிலைக்கு வருந்தினர்.
முட்டையின் மஞ்சள் கரு கொழுப்பை அதிகரிக்குமா?
முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு அதிகமாக இருப்பதாக நம்பி பலரும் வெள்ளைக்கருவை மட்டுமே சாப்பிடுகின்றனர். ஆனால், மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ, ஈ மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற முக்கிய ஊட்டச் சத்துக்கள் இருப்பதாகவும், இதனால் முழு முட்டையையும் சாப்பிட வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், மஞ்சள் கரு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுக்கு
விரிக்கப்பட்ட வலை: கார்கே
விரிக்கப்பட்ட வலை: கார்கே
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கு விரிக்கப்பட்ட வலை என்று கார்கே விமர்சித்துள்ளார். ரஷ்ய எண்ணெயை நிறுத்த ஒப்புக்கொண்டதும், மரபணு மாற்றப்பட்ட தீவனங்கள் & பருப்பு வகைகளை இறக்குமதி செய்ய இசைவு தெரிவித்ததும் இந்திய விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஒப்பந்தப்படி ஆடை ஏற்றுமதியில் இந்தியாவை விட வங்கதேசத்திற்கே அதிக ஆதாயம் என்றும் கார்கே தெரிவித்தார்.
