சென்னை, பிப்.11–- பல குடும்பங்களின் ‘தலையெழுத்தை’ திமுக அரசு மாற்றியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, நுங்கம்பாக்கம், கல்லூரி சாலை, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று (பிப். 10) பாராட்டு விழா நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது: “இந்தப் பாராட்டு விழா கூடுதல் பொறுப்பை எனக்கு தருகிறது.”
இந்தப் பாராட்டு விழா அன்பின் வெளிப்பாடு, நான் உங்களுக்கு செய்யவேண்டிய பொறுப்புணர்வு நிறையவுள்ளது. இன்னும் நிறைவேற்ற வேண்டிய சில கோரிக்கைகள் உள்ளன. அவற்றை நிறைவேற்றுவதற்கு மீண்டும் நாங்கள் ஆட்சியமைப்போம்.
நீங்கள் பேசியப் பேச்சை கேட்டால் கொஞ்சம்கூட சந்தேகம் இல்லை, மீதமுள்ள கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.
‘புதுமைப் பெண்கள்’ திட்டத்தால் பெண்கள் உயர் கல்வியில் சேருவது 34% உயர்ந்துள்ளது. புதுமைப் பெண்கள் திட்டத்தால் நகர்ப்புற மாணவிகளைக் காட்டிலும் கிராமப்புற மாணவிகள் அதிகம் பயனடைந்துள்ளனர். பட்டப் படிப்போடு நிறுத்தாமல் ஆராய்ச்சிப் படிப்பு வரை பெண்கள் படிக்க வேண்டும். கல்விதான் பெண்களுக்கு சிறந்த அணிகலன். பெண்கள் முன்னேறினால் ஒரு தலைமுறையே முன்னேறும். வெற்றிக்கு குறுக்கு வழி கிடையாது, கடின உழைப்பு தேவை.
5 ஆண்டுகளில் பல குடும்பங்களின் ‘தலையெழுத்தை’ திமுக அரசு மாற்றியுள்ளது. தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது. சிறுமிகளுக்கு இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி, தமிழ்நாட்டில் மட்டும்தான் செலுத்துப்படுகிறது. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
