திருச்சி, பிப்.11- 06.02.2026 (வெள்ளிக்கிழமை) அன்று பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 2025-2026ஆம் கல்வியாண்டில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு 11ஆம் வகுப்பு மாணவிகளால் பிரியா விடை விழா வழங்கப்பட்டது. பள்ளியின் செயலர் வீ.அன்புராஜ் அவர்களின் வழிகாட்டுதலின்படி தலைமையாசிரியை சு.பாக்கியலெட்சுமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு 11ஆம் வகுப்பு மாணவி வி.எஸ்.ஜனனி வரவேற்று உரை நிகழ்த்தினார். பின்பு மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் இப்பள்ளியில் பயின்ற மலரும் நினைவுகள் அடங்கிய ஒளிப்படங்களை திரையிட்டு மகிழ்ந்தனர். மாணவிகள் ஒவ்வொருவரும் பள்ளியில் பயின்ற அனுபவங்களை ஆனந்த கண்ணீராக வெளிப்படுத்தினர். பள்ளி தலைமையாசிரியர் மாணவியர்களின் எதிர்காலம், சவால்களை எதிர்கொண்டு எவ்வாறு சாதனை படைக்க வேண்டும் என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துக்கூறி 12ஆம் வகுப்பு தேர்வை எதிர்கொள்ளும் மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். பின்பு இருபால் ஆசிரியர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
பின்பு மாணவிகளுக்கு நினைவுப் பரிசுடன் (கைக்கடிகாரம்) கூடிய சிற்றூண்டி வழங்கப்பட்டது. 11ஆம் வகுப்பு மாணவி அ.சனா நன்றி நவில நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
இவ்விழாவினை பள்ளியின் இயற்பியல் ஆசிரியை எஸ்.சிந்துஐா மற்றும் 11ஆம் வகுப்பு மாணவிகளும் ஒருங்கிணைந்து நடத்தினர்.
