திருவனந்தபுரம், பிப்.10 ‘‘சபரிமலைக் கோயில் தங்கம் கொள்ளை வழக்கில் சிக்கிய கண்டரரு ராஜீவரருவை தந்திரி பதவியில் இருந்து நீக்குவது பற்றி தீர்மானம் நிறைவேற்றப்படும் ” என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கே.ஜெயக்குமார் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
சபரிமலையில் அடுத்த மண்டல, மகரவிளக்கு காலத்தில் அடிப்படையான பல மாற்றங்கள் ஏற்படும். அதற்கான திட்டம் தயா ரிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்காக மட்டும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தனி பட்ஜெட் தயாரிக்கும். பம்பையில் பக்தர்கள் தங்குவதற்காக கட்டடங்கள் கட்டப்ப டும். சபரிமலையில் தந்திரிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறி மாறி வருவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தங்கம் கொள்ளை வழக்கில் சிக்கிய கண்டரரு ராஜீவரருவை தந்திரி பதவியில் இருந்து நீக்குவது பற்றி முடிவு எடுக்கப்படும். அதில் எவ்வித சங்கடமும் இல்லை. சன்னிதானத்தில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதில் கட்டுப்பாடு ஏற்படுத்தப்படும். அரை மணி நேரத்துக்கு இடைவெளி விட்டு மட்டுமே அறிவிப்புகள் வெளி யிடப்படும். கடந்த மகர விளக்கின் போது ரூ. 483 கோடி வருமானம் கிடைத்துள்ளது. எனினும் எவ்வளவு செலவு ஏற்பட்டது என்பது பற்றி இன்னும் கணக்கிடப்படவில்லை.
இனி, யாரும் தானாக வந்து சபரி மலையில் ஸ்பான்சர் செய்வதை ஏற்க முடியாது. தேவசம்போர்டு முடிவு செய்து ஸ்பான்சர்களை அழைப்போம். சபரிமலையில் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்படும். இதற்காக கோயில் ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும். தற்காலிக ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். சபரிமலையில் தடையை மீறி திரைப்படப் படப்பிடிப்பு நடந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் என்ன காட்சிகளைப் பதிவு செய்தார்கள் என்பது ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
