தமிழரின் பொற்காலம் தொடங்கி நல்ல முறையில் சென்று கொண்டுள்ளது என்பதை இங்கு சொல்லி வருகின்றேன்.
அண்மையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் “என்னய்யா, நம்ம மருத்துவர் (இளங்கோவன்) ஊர் பிச்சாண்டார்கோவில் இவ்வளவு வளர்ந்துள்ளது” என்று வியப்படைந்தாராம்!
தமிழ்நாட்டுக் கிராமங்களைப் பார்ப்பவர்கள் வியப்படையத் தான் வேண்டும். குடிசைகளாக இருந்த உழைப்பாளிகளின் குடிசைகள் மறைந்து இன்று கழிப்பறைகளுடன் கூடிய கட்டடங்கள் நிறைந்துள்ளது எங்கள் ஊர்! (பிச்சாண்டார்கோவில்).
உலகெங்கும் வாழும் திராவிடத் தமிழர்கள் எவ்வளவு சிறப்புடன் வாழ்கின்றனர் என்பதைப் பறைசாற்றும் வண்ணம் உலகெங்கும் தமிழ் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இலக்கிய, கலை நிகழ்ச்சிகள் மட்டுமன்றி, தொழில் முனைவோர் மாநாடுகள் நடைபெறுவதும் அதில் உலகெங்குமிருந்து பல் துறை வல்லுநர்கள் பங்கேற்பதும், அவர்கள் அடைந்துள்ள பெரும் வெற்றிகளும் ‘தமிழரின் பொற்காலம்’ என்பதை நிலை நாட்டுகின்றன.
அமெரிக்காவில் இன்று தமிழ்ப் பள்ளிகள் இல்லாத ஊர்களே இல்லை. தமிழ்ச் சங்கங்கள் ஓங்கி வளர்ந்து விழாக்கள் நடத்துகின்றன.பொங்கல் விழாக்கள் மிகவும் சிறப்பாகக் குடும்ப விழாக்களாக நடைபெறுகின்றன.

மிகவும் பெருமைப்பட வேண்டியது என்னவென்றால், நமது இளைய தலைமுறைகளின் பெருமை மிகு நிகழ்ச்சிகள். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த குழந்தைகள் அழகான தமிழ் பேசி, பாடி, நடித்துச் சிறப்பிப்பது நம்ப முடியாததுதான். அண்மையில் வடகரோலினா மாநிலத்தில் தமிழ்ச் சங்கப் பொங்கல் விழா நடந்தது. 60க்கும் மேற்பட்ட அருமையான நிகழ்ச்சிகள். ஒரு மணித்துளியும் வீணாக்காமல் தொடர்ச்சியாகச் சிறப்பாகக் குழந்தைகள், சிறியோர் பெரியோர் நடனம், நாடகம் என்று ஆயிரத்திற்கும் மேல் குடும்பமாக வந்து பங்கேற்றனர். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நான்கு பேர் முதல் அய்ம்பது பேர் வரைக் கலந்து ஒருமித்து நடத்திக் காட்டிய அற்புதம். இரண்டு வேளை அறுசுவை உணவு. பல்வேறு துறைகளில் பணிபுரிவோர் தாமாக உழைத்த (Volunteer) உன்னதம் – மலைக்க வைக்கும் சிறப்பாகும். அரசியல் தலைவர்களையும் அழைத்துச் சிறப்பு செய்வார்கள். இது போன்றே அமெரிக்காவின் பல நகரங்களில் குடும்ப விழாக்கள் நடந்து குடும்பங்களை இணைப்பது பெருமைக்குரியது. இதில் பலரும் குடும்பங்களின் முதல் பட்டதாரிகள்; கிராமங்களில் இருந்து வந்தவர்கள்; உழைத்து முன்னேறியவர்கள். பெரும்பாலான மகளிரும் அப்படியே! பலர் காதல் திருமணங்கள் செய்து கொண்டவர்கள். அது தான் மிகவும் முக்கியம். தமிழ்நாட்டின் சிறப்பு!
‘திராவிட இயக்கம்’ என்ன செய்தது என்று கேட்போர் புரிந்து கொள்ளட்டும். இது தமிழ்நாட்டில் பரவ வேண்டும்.
திராவிட இயக்கத் தலைவர்கள் அன்று முதல் இன்று வரை அளப்பரிய செயல்கள் செய்துள்ளனர்; செய்து வருகின்றனர். அன்றைய தலைவர்கள் தங்கள் சொத்து, சுகத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நமக்காக உழைத்துப் போராடிப் பெற்றவை ஏராளம். இன்று தனது 93 வயதிலேயும் அலைந்து திரிந்து உழைக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள், ‘மக்கள் முன்னேற்றம்’, முக்கியமாக ‘மகளிர் முன்னேற்றம்’ என்று கண்ணும் கருத்துமாக உழைக்கும் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் ஆகியோர் செய்யும் பணிகள் வியக்க வைக்கின்றன. உலகே உன்னிப்பாகக் கவனித்து வருகின்றது.
இன்னும் நாம் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய உள்ளன என்பதைச் சுட்டிக் காட்டும் இளைய தலை முறைக்கு அவர்கள் மொழியில் நாம் செயல்பட வேண்டும்.
தமிழார்வம் இல்லாதவர்களுக்கு அவர்களுடைய தாத்தா, பாட்டித் திருமண அழைப்பிதழ்களைக் காண்பிக்க வேண்டும்.
ஜாதி வெறி மீண்டும் தலை விரித்தாடுகின்றது. தமிழ்ச் சங்கங்கள் வளர்வதை விட ஜாதிச் சங்கங்கள் வளர்கின்றன. இடையில் வந்த ஜாதி, நடுவில் வளர்ந்த ஜாதி – முடிவில் சாகும் என்பதை திராவிட இயக்கக் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் முகத்தில் அறைந்து சொல்வார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வைக்க வேண்டும்.
ஸநாதனப் பாம்பு தலை காட்டினால் நசுக்கப்பட வேண்டும்.
‘உழைப்பது பெருமை’, ‘தொண்டு செய்வது உண்மை மகிழ்ச்சி’ என்பதைக் குடும்பங்கள் இணைந்து நடத்தும் விழாக்கள் மூலம் செயல்களில் காட்ட வேண்டும். பொது இடங்களை தூய்மையாக அழகு படுத்துவது, ஊனமுற்றோர், முதியோர் இவர்களுக்கு உதவுவதை மாதம் ஒரு நாள் குடும்பங்களாகச் செய்து காட்ட வேண்டும். குழந்தைகள் ஆடிப் பாடி மகிழச் செய்ய வேண்டும்.
நன்றி எதிர்பார்க்காமல் தொண்டாற்றும் நமது இயக்கம்தான் எதிலும் முன்னோடி. நாம் செய்யத் தொடங்கினால் மற்றவர்கள் கட்டாயம் பின் பற்றுவார்கள்.
குடும்பங்கள் கைப்பேசிகளிலிருந்து ஓய்வு பெற்று ஒன்றாக இணைந்து தொண்டாற்றுவது நல்ல பயன் தரும்!
‘பொற்காலம்’ என்பது வெறும் கல்வி, பொருளாதார முன்னேற்றம் மட்டும் அல்ல. அனைவரின் வாழ்க்கைத் தரமும் முன்னேறி அனைவரும் மகிழ்ச்சி நிறைந்து வாழ்வது தான்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
– சோம. இளங்கோவன்
அமெரிக்கா
