சென்னை, பிப். 9– ‘விவசாயத் தொழிலாளர்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு துணைபோகும் அதிமுகவின் போராட்டத்தைக் கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்’ என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 2004ஆம் ஆண்டு இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் அமைந்த அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில்தான், ஊரகத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை பெறுவதை சட்டப்பூர்வ உரிமையாக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது, மக்களவையில் அதிமுக உறுப்பினர்கள் ஒருவர்கூட இல்லை.
கடந்த 2014 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில், பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு இத்திட்டத்தை சிதைத்து, நிதி மடைமாற்றம் செய்தபோது ஆட்சியில் இருந்த அதிமுக, வாய் திறக்காமல் அதை வேடிக்கை பார்த்தது. பின்னர் கடந்த டிசம்பர் மாதம் இத்திட்டத்தை நீக்கிவிட்டு, சட்ட உத்தரவாதம் இல்லாத ‘விபி ஜிராம் ஜி’ திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்தது. இது தமிழ்நாட்டில் உள்ள விவசாயத் தொழிலாளர்களையும், சிறு, குறு விவசாயிகளையும் வஞ்சிக்கும் செயல்.
இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு துணை போகும் அதிமுக, கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீா்குலைக்க முயற்சிப்பதாக தமிழ்நாடு அரசை கண்டித்து பிப்.13ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
இது அப்பட்டமான அவதூறு. இத்திட்டத்துக்கான நிதியை ஆண்டுதோறும் ஒன்றிய அரசு குறைத்து வருவதால், மாநில அரசுக்கு ஏற்படும் நெருக்கடியை அதிமுக கூற மறுக்கிறது. அதிமுக அறிவித்துள்ள போராட்டம், தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் ஒன்றிய அரசின் வஞ்சக செயலுக்கு துணைபோகும் நோக்கம் கொண்டது. இதற்கு மக்கள் ஏமாற மாட்டார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
