சென்னை, பிப்.8 தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இழுபறி நீடிக்கிறது. கடந்த தேர்தலை போல் 25 தொகுதிகளை ஏற்க முடியாது. கூடுதல் தொகுதிகள் வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் முன் வைத்துள்ளதால் கூட்டணியை உறுதிப்படுத்தி தொகுதிப்பங்கீட்டை முடிப்பதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை குழு அமைத்ததும் பேசி முடிவு செய்யலாம் என்று தி.மு.க.தரப்பில் கூறப்பட்டது. எனவே பேச்சுவார்த்தை குழுவை உடனே அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 5-ஆம் தேதிக்குள் பேச்சுவார்த்தை குழுவை அமைக்கும்படி காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழுத் தலைவர் கிரீஷ்சோடங்கர் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை தொடர்பாக ராகுல்காந்தி டில்லியில் கே.சி. வேணுகோபால், தமிழ்நாடு பொறுப்பாளர் கிரீஷ்சோடங்கர் ஆகியோருடன் முக்கிய ஆலோசனை நடத்தப்போவதாக டில்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன. இந்த ஆலோசனைக்கு பிறகு ராகுல்காந்தி முக்கிய முடிவுகளை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகையும் வருகிற 10-ஆம் தேதி டில்லி செல்கிறார். அன்றைய தினம் காங்கிரசில் புதிதாக நியமிக்கப்பட்ட 692 மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சிப் பட்டறை டில்லியில் நடக்கிறது. இதில் கு.செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் பங்கேற்கிறார்கள். டில்லியில் அவர்களையும் அழைத்து மேலிடத் தலைவர்கள் ஆலோசனை நடத்தவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் கூட்டணி சர்ச்சைகளுக்கு முடிவு வரும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள்.
