பூம்புகார் நிறுவனம்: பத்தமடை பாய் உள்ளிட்ட 23 கலைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

3 Min Read

சென்னை, பிப். 7- பூம்புகார் நிறுவனம் மூலம் பத்தமடை பாய் உள்பட 23 கலைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடுபெறப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் பொதுத்துறைநிறுவனமான பூம்புகார் சார்பில்கைவினைப் பொருட்கள் கண்காட்சி, கருத்தரங்கம் மற்றும் பூம்புகார் விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று (6.2.2026) நடைபெற்றது. இதில் மாவட்ட அளவில்சிறந்த கைவினைஞர்களுக்கு பூம்புகார் விருதுகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். மேலும், தமிழ்நாடு கைவினைஞர்களுக்கு சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பூம்புகார் நிறுவனத்தின் புதிய மின்வணிக இணையதளத்தையும் (www.poompuhar.com) தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

புவிசார் குறியீடு

பூம்புகார் நிறுவனம், கடந்த 52 ஆண்டுகளாக கைவினைக் கலைஞர்களுக்கு சிறந்த சேவையை வழங்கி வருகிறது. கடந்த 5 ஆண்டு காலத்தில் நேரடி விற்பனை, இணையதள விற்பனை, ஏற்றுமதி ஆகியவற்றின் மூலம் ரூ. 232 கோடியே 22 லட்சம்மதிப்பிலான கலை பொருட்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

தமிழ்நாட்டின் கைவினைப் பொருட்களை உலக அளவில் கொண்டு செல்ல பூம்புகார் நிறுவனத்தின் மூலம் பூவிசார் குறியீடுகள் பெற ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி, அரும்பாவூர் – மரச்சிற்பங்கள், தஞ்சாவூர், கருப்பூர் கலங்காரி – ஓவியங்கள், மாமல்லபுரம், மயிலாடி – கற்சிற்பங்கள், சுவாமிமலை பஞ்சலோக சிற்பங்கள், பத்தமடை பாய் என 23 கைவினைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.

10 கைவினைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமுதாயத்தின் அனைத்து வகை தொழில்முனைவோரும் பயன்பெறும் வகையில், கலைஞர் கைவினைத் திட்டத்தை அரசுசெயல்படுத்தி வருகிறது. பூம்புகார் நிறுவனத்தின் மூலம் இந்த திட்டத்தின்கீழ் 504 கைவினைக் கலைஞர்கள் ரூ. 2 கோடியே 52 லட்சம் மானியத்துடன் ரூ.15 கோடியே 12 லட்சம் கடன் பெற்று பயன் அடைந்துள்ளனர். இத்திட்டத்தை கைவினைஞர்கள் நன்கு பயன்படுத்தி கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 

குடிநீர் பாட்டில்களில்
மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்

எச்சரிக்கை வாசகம்
இடம்பெறச் செய்ய வேண்டும்!

உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, பிப்.7- குடிநீர் பாட்டில்களிலும் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிக்கை தாக்கல் செய்த நிலையில், அது குறித்த எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் எனும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கண்டறியப்பட்டதாக வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு தாமாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டது. இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று (6.2.2026) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஒன்றிய சுகாதார துறை சார்பில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில், உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் பொதிந்து விற்பனை செய்வது தொடர்பாக ஏற்கெனவே வழிகாட்டு விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பிளாஸ்டிக் நுண்துகள்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து லக்னோ, கொச்சி, பிலானி மூன்று இடங்களில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் குடிநீர் பாட்டில்களின் மாதிரிகளில் சேகரிக்கப்பட்டு, ஆய்வு செய்தபோது, அவற்றில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதேபோல பிளாஸ்டிக் பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் உப்பு, சர்க்கரையிலும் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பதாக தெரியவந்துள்ளதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், ‘மைக்ரோ பிளாஸ்டிக்கால் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், விலங்குகளுக்கும் தீங்கை ஏற்படுத்தக்கூடியது; அன்றாடம் பயன்படுத்தும் குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கண்டறியப்பட்டுள்ளதால், அவற்றில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறச்செய்ய வேண்டும் என குடிநீர் பாட்டில் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்த வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

ஆய்வுகள் ஆரம்ப நிலையில் இருப்பதால், எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் செய்தால் மக்களிடையே குழப்பம் ஏற்படும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆய்வுகளை விரைந்து முடிக்க அறிவுறுத்திய நீதிபதிகள், அதுவரை எச்சரிக்கை வாசகங்களை ஓட்டவேண்டும் என குடிநீர் பாட்டில் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *