இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தில், வரி வருவாயைப் பகிர்ந்தளிப்பது என்பது எப்போதும் விவாதத்திற்குரிய ஒரு முக்கியமான கருப்பொருளாக இருந்து வருகிறது. குறிப்பாக, அதிக வரி வருவாயை ஈட்டித் தரும் மாநிலங்களுக்கு, அதற்கேற்ற விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக வலுப்பெற்று வருகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மாநிலங்கள் ஈட்டும் வரி வருவாயில் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒன்றிய அரசு பெற்று, அதனை மீண்டும் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கிறது. ஒன்றிய அரசில் திட்டக் கமிசன் இருக்கும் வரை நிதி குறைப்பு இருந்தாலும் மாநிலங்களில் குரலை ஏற்று பரிசீலனை செய்யும் அமைப்பு இருந்தது.
ஆனால், தற்போதைய ஒன்றிய மோடி அரசு திட்டக்கமிசனை அறவே நீக்கி விட்டது, குறிப்பாக அதில் அரசு உயரதிகாரிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களின் பங்களிப்பு இருந்தது.
மோடி அரசு புதிதாக ‘நிதி ஆயோக்’ என்ற ஒன்றைக் கொண்டுவந்தது. தற்போது இதன் பரிந்துரையின் அடிப்படையில் இந்தப் பகிர்வு நடைபெறுகிறது. இந்த நிதி ஆயோக்கின் உறுப்பினர்கள் பெரும்பாலும் தனியார் நிறுவனத்தின் உயரதிகாரிகள் அரசு அதிகாரிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களின் பங்கு முற்றிலும் இல்லாமல் போனதும் பெயரளவிற்கு இருக்கும் ஆலோசகர்களும் ஒன்றிய அரசின் கைப்பாவைகளாக உள்ளனர். இவர்களின் ஆலோசனை, அதிக பங்களிப்பை வழங்கும் மாநிலங்களுக்குக் குறைவான நிதியே திரும்பக் கிடைக்க காரணமாகி விடுகிறது.
தமிழ்நாடு, உள்ளிட்ட மாநிலங்கள் நாட்டின் மொத்த வரி வருவாயில் (GST, வருமான வரி போன்றவை) பெரும்பகுதியை வழங்குகின்றன. ஒரு மாநிலம் ஒன்றிய அரசுக்கு 1 ரூபாய் வரியாக வழங்கினால், அதற்குப் பதிலாக 29 காசுகள் அல்லது 30 காசுகள் மட்டுமே திரும்பக் கிடைக்கின்றன.
நிதிப் பகிர்வில் 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, சமீபத்திய மக்கள் தொகையைப் பயன்படுத்துவது, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய முன்னேறிய மாநிலங்களுக்குத் தண்டனை வழங்குவது போல் அமைகிறது. ஒன்றிய அரசு பின்வரும் காரணங்களுக்காக நிதிப் பகிர்வில் மாற்றங்களைச் செய்கிறது: பின்தங்கிய மாநிலங்களின் வளர்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்கப்படுகிறது.
கட்டமைப்பு வசதிகள்: மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலங்களில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிக நிதி தேவைப்படுகிறது. இருப்பினும், சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களின் வருவாயைக் குறைப்பது அந்த மாநிலங்களின் தொழில்துறை வளர்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் சமூக நலத் திட்டங்களை முடக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
வரி வருவாயில் பெரும் பங்களிப்பை வழங்கும் மாநிலங்கள் முன்வைக்கும் முக்கியக் கோரிக்கைகள் என்னவெனில், செயல்திறனுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். வரி வசூல் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு ‘ஊக்கத்தொகை’ அடிப்படையில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
மறுபகிர்வு விகிதம்: மாநிலங்கள் வழங்கும் வரியில் குறைந்தபட்சம் 50 சதவீதமாவது அந்தந்த மாநிலங்களுக்கே திரும்ப வழங்கப்பட வேண்டும். செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் ஒன்றிய அரசு வசூலிக்கும் ‘செஸ்’ வரிகள் மாநிலங்களுடன் பகிரப்படுவதில்லை. இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அனைத்து மாநிலங்களின் முன்னேற்றமும் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், உழைக்கும் மாநிலங்களின் நிதி ஆதாரத்தைச் சுருக்கி, பின்தங்கிய மாநிலங்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பது நீண்ட கால அடிப்படையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும். எனவே, பங்களிப்பு மற்றும் தேவை ஆகிய இரண்டிற்கும் இடையே ஒரு சரியான சமநிலையை நிதி ஆணையம் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் “வலிமையான மாநிலங்களே வலிமையான இந்தியாவின் அடிப்படை” என்ற தத்துவம் உண்மையாக உருவெடுக்கும்.
