தனிப்பட்ட நபர்கள் யாரும், தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது!
‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சிக்குத்
தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி!
தருமபுரி, ஜன.6 தனிப்பட்ட நபர்கள் யாரும், தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது! அ.தி.மு.க. தன்னுடைய அடையாளத்தை இழந்து நீண்ட காலம் ஆகிவிட்டது! இப்போது ‘மோடி’தான் இருக்கி றார்; ‘லேடி’யை மறந்துவிட்டார்கள்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சிக்குத்
தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
நேற்று (5.2.2026) தருமபுரிக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார். அவரது பேட்டி வருமாறு
அனுபவமும், ஆற்றலும் உள்ளவர்; தொடர்ந்து வெற்றிக் கனியைப் பறிப்பவர்!
நெறியாளர்: தேர்தல் வரக்கூடிய இந்தக் கால கட்டத்தில், எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் பணி களைச் செய்து வருகின்றன. தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சிகள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? தே.மு.தி.க. எந்த நிலைப்பாட்டையும் எடுக்காமல் இருக்கின்றது. அது தி.மு.க.விற்கு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா
தமிழர் தலைவர்: இந்தக் கேள்விக்குச் சரியான பதில் அளிக்கக் கூடியவர் தி.மு.க. தலைவரான முதல மைச்சரான மு.க.ஸ்டாலின் அவர்கள்தான்.
என்னுடைய வேலை என்பது, யார், எந்தக் கூட்டணிக்கு வருகிறார்கள் என்பதல்ல. தி.மு.க. கூட்டணி கொள்கையுள்ள ஒரு கூட்டணி. அந்தக் கூட்டணி வெற்றி பெற்று, மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால்தான், தமிழ்நாடு, தமிழ்நாடாக இருக்கும்; பெரியார் நாடாக இருக்கும். சமூகநீதிக் களமாக இருக்கும். இந்தக் காரணத்தினால், பணி செய்வதுதான் எங்களைப் போன்றவர்களுடைய, திராவிடர் கழகத்தினுடைய வேலையே தவிர, யார் எந்தக் கூட்டணியில், எப்போது வருகிறார்கள் என்பதையெல்லாம் முடிவு செய்யவேண்டிய உரிமை யும், கடமையும் திராவிட முன்னேற்றக் கழகத் தலை வருக்கு உண்டு. அதைச் சிறப்பாகச் செய்வார். அந்த ஆற்றலும், தகுதியும், நல்ல மனப்போக்கும் அவருக்கு இருக்கிறது. அனுபவம் இருக்கிறது. வெற்றிக் கனியைத் தொடர்ந்து பறிப்பவர் அவர்.
மீண்டும் உதயசூரியன்
கோட்டையில் உதிக்கவேண்டும்!
ஆகவே, அவர் யாரை நிறுத்தினாலும், அவர்களை ஆதரிப்பது எங்களுடைய முடிவாகும். காரணம், மீண்டும் உதயசூரியன் கோட்டையில் உதிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கமாகும்.
ஆகவே, கூட்டணிக்கு யார் வருகிறார்கள், யாரை அழைக்கிறார்கள் என்பது அவருடைய பொறுப்பு.
தனிப்பட்ட நபர்கள் யாரும், தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது!
நெறியாளர்: இந்தியா கூட்டணி 10 ஆண்டுகளுக்கு மேலாக வலுவான கூட்டணியாக இருக்கிறது. ஆனால், அண்மைக்காலமாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், த.வெ.க. கட்சிக்கு ஆதர வாக – விஜய்க்கு ஆதரவாக நாள்தோறும் பேசி வரு கிறாரே, இது இந்தியா கூட்டணியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தாதா?
தமிழர் தலைவர்: தி.மு.க. கூட்டணி கொள்கைக் கூட்டணியாக இருக்கின்ற காரணத்தினால், தனிப்பட்ட நபர்கள் யாரும், இக்கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்திவிட முடியாது.
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில், அதனுடைய தலைமை மட்டுமே முடிவு செய்யும்.
காங்கிரசின் பலம்; காங்கிரசின் பலவீனம்!
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில், அது ஒரு ஜனநாயகக் கட்சி என்ற முறையில், அடிக்கடி அவர்கள் இப்படிச் சொல்லிக் கொள்வார்கள். எங்க ளுக்குக் கருத்துச் சுதந்திரம் உண்டு என்று. சிலர், இப்படிப்பட்ட சில கருத்துகளைச் சொல்கிறார்கள். அதுதான் காங்கிரசின் பலம்; அதுதான் காங்கிரசின் பலவீனமும்கூட என்று இருக்கின்ற காரணத்தினால், இதுபோன்று ஒரு சிலர் கருத்துகளைக் கூறுவதினால், தி.மு.க. கூட்டணி எந்த வகையிலும் பாதிக்கப்படாது.
‘வடையை எதிர்பார்த்த நரி போன்று’ ஆகிவிடுவார்கள்!
அதுமட்டுமல்ல, அதனுடைய தலைவராகவும், வழிகாட்டியாகவும் இப்போது இருக்கக்கூடிய பெருமதிப்பிற்குரிய ராகுல் காந்தி அவர்கள், ‘‘மற்றவர்கள் யாரும் அதைப்பற்றி பேசவேண்டிய அவசியமில்லை’’ என்று ஒரு தாக்கீதே கொடுத்திருக்கிறார்கள். ஆகவே, சிலர் இதுபோன்று பேசுவதால், அது தி.மு.க. கூட்டணியைப் பாதிக்காது.
இதன்மூலம் லாபமடையலாம் என்று எண்ணு கிறவர்கள் சிலர், ‘வடையை எதிர்பார்த்த நரி போன்று’ ஆகிவிடுவார்கள்.
அ.தி.மு.க. தன்னுடைய அடையாளத்தை இழந்து நீண்ட காலம் ஆகிவிட்டது!
நெறியாளர்: அ.தி.மு.க. கூட்டணியில், பா.ஜ.க. இருப்பதால், சிறுபான்மையினருடைய வாக்குகள் அந்தக் கூட்டணிக்குக் கிடையாது என்ற நிலையில், எடப்பாடி பழனிசாமி அவர்கள், நாள்தோறும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார். குறிப்பாக, நேற்று சிறுபான்மையினப் பெண்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்கு வட்டி இல்லாத கடன்கள் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார். இதனால், சிறுபான்மையினருடைய வாக்குகள் அ.தி.மு.க. கூட்டணிக்கு எந்த அளவிற்குப் போகும் என்று நினைக்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: அ.தி.மு.க. தன்னுடைய அடையாளத்தை இழந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. ஏனென்றால், எந்தத் தலைமையை பெரிதாகக் கருதினார்களோ, அந்தத் தலைமை காட்டிய வழியிலிருந்தும், இட்ட கட்டளையை மீறியும், எப்போது தங்கள் கட்சியான அ.தி.மு.க.வை, பா.ஜ.க.விடம் அடகு வைத்து ஒப்படைத்தார்களோ, கூட்டணி சேர்ந்தார்களோ, அன்றைக்கே அவர்கள் தங்களது அடையாளத்தை இழந்ததோடு மட்டுமல்ல, சுதந்திரத்தையும் இழந்துவிட்டார்கள்.
இப்போது மோடிதான் இருக்கிறார்;
லேடியை மறந்துவிட்டார்கள்!
‘‘லேடியா, மோடியா?’’ என்று கேட்டார் ஜெயலலிதா அம்மையார் அவர்கள். ஆனால், இவர்கள், ‘‘அம்மா ஆட்சி, அம்மா ஆட்சி அமைப்போம்’’ என்று சொல்லும் நிலையில், இப்போது மோடிதான் இருக்கிறார்; லேடியை மறந்துவிட்டார்கள்.
விட்டலாச்சாரியாரை மிஞ்சிவிட்டார் ஓம்பிர்லா
நெறியாளர்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்பார்கள் என்பதற்காக, பிரதமர் மோடி வரவில்லை என்று விமர்சனம் இருக்கின்ற நிலையில், பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வந்தால், அவரை எதிர்க்கட்சியினர் தாக்குவதற்கான சதித் திட்டம் இருந்ததால், அவரை வரவேண்டாம் என்று சொன்னோம் என்று பேரவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்திருக்கிறாரே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இப்படி ஒரு நகைச்சுவையை கேள்விப்பட்டது கிடையாது. அந்தக் காலத்தில் விட்டலாச்சாரியார் படம் என்ற ஒன்று உண்டு. அந்தப் படத்தில், அதிசயமான பல நிகழ்வுகளையெல்லாம் கோர்த்துக் கோர்த்துப் போடுவார்கள். விட்டலாச்சாரியாரை மிஞ்சிவிட்டார் ஓம்பிர்லா.
அரசியல் கட்சியாக முதலில் நடத்தட்டும்!
நெறியாளர்: கடந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருமுனைப் போட்டியாக இருந்தது. இப்போது மும்முனைப் போட்டியாக நடிகர் விஜய் வந்திருக்கிறார். விஜய்யின் வரவு தமிழ்நாட்டு அரசியலில் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தும். தி.மு.க. – அ.தி.மு.க. கூட்டணியில், யாருக்கு அது பாதிப்பாக இருக்கும்?
தமிழர் தலைவர்: இன்னும் அவருடைய கட்சியை, அரசியல் கட்சியாக நடத்தவில்லை. ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் அரசியல் கட்சி நடத்தினால்தான், அது பாதிப்பா? சாதிப்பா? என்று சொல்லலாம். அவர் எப்போது கொள்கையைச் சொல்லி அரசியல் கட்சி நடத்துகிறாரோ, அப்போது நான் இந்தக் கேள்விக்குப் பதில் சொன்னால், பொருத்தமாக இருக்கும்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி புதிய தலைமுறைத் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார்.
