‘கேம்பஸ் ஃப்ளோரா’ நூல் வெளியீடு மற்றும் மாணவர் நலன் குறித்த விழிப்புணர்வு!
திருச்சி, பிப்.5– திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 20-ஆவது
யு.கே.ஜி பட்டமளிப்பு விழா மற்றும் கலைத்திருவிழா 28.01.2026 அன்று காலை 10.00 மணியளவில் பள்ளியின் கலைவாணர் என்.எஸ்.கே. அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பள்ளியின் முதல்வர் முனைவர் க.வனிதா மற்றும் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.பாக்கியலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மொழி வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவி செல்வி அர்ச்சனா வரவேற்புரை ஆற்றினார்.
தொடர்ந்து, சிறப்பு விருந்தினருக்குப் பயனாடை, நினைவுப் பரிசு மற்றும் புத்தகங்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
‘கேம்பஸ் ஃப்ளோரா’ (Campus Flora) நூல் வெளியீடு: விழாவின் ஒரு பகுதியாக, பள்ளியின் முதுகலை உயிரியல் ஆசிரியர் ஜி.சிவராமகிருஷ்ணன் மற்றும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு உயிரியல் பிரிவு மாணவர்கள் இணைந்து தொகுத்த ‘கேம்பஸ் ஃப்ளோரா’ என்ற நூல் வெளியிடப்பட்டது. கல்வி வளாகத்தில் உள்ள தாவரங்களின் உயிரியல் பெயர்கள் மற்றும் மருத்துவப் பயன்களை விளக்கும் மாணவர்களின் இந்த முயற்சிக்குச் சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
சிறப்பு விருந்தினர்களின் உரை: பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் உயிரித் தொழில்நுட்பத் துறைப் பேராசிரியர் மற்றும் சேர்க்கைப் பிரிவின் இணை இயக்குநர், முனைவர் டி. கிருஷ்ணகுமார் தனது சிறப்புரையில், “இந்தப் பட்டமளிப்பு விழாவின் சிறப்பான ஒருங்கிணைப்பு மற்றும் ஏற்பாடுகள் பாராட்டுக்குரியவை. இன்றைய சூழலில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன், போதிய நேரம் செலவழிக்க வேண்டியது அவசியம். பிள்ளைகள் தங்கள் மனதில் உள்ள அனைத்தையும் பெற்றோர்களிடம் தயக்கமின்றிப் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு அவர்களுடன் நட்பான உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

சிறப்பு விருந்தினர் திருச்சி,ஜமால் முகமது கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர், முனைவர் பி.சிராஜுதீன் தன் வாழ்த்துரையில்
மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறிவுரை வழங்கியதோடு, “கல்வியில் கண்டிப்பு அவசியம். கண்டிப்பு கலந்த கல்விக்கு பெற்றோர்கள் ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது. குழந்தைகளிடம் காட்டும் அதிக செல்லம் பிற்காலத்தில் ஆபத்தை விளைவிக்கும். குறிப்பாக, பெற்றோர்கள் தங்களின் கஷ்டங்களைத் தெரியப்படுத்தாமல் குழந்தைகளை வளர்க்கக் கூடாது; பெற்றோரின் கஷ்டங்கள் தெரிந்தால் மட்டுமே குழந்தைகளுக்குப் பொறுப்புணர்வு வளரும்” என்று குறிப்பிட்டதோடு, இன்றைய பட்டமளிப்பு விழா கல்லூரிகளில் நடைபெறும் பட்டமளிப்பு விழா போல மிக நேர்த்தியாக இருந்தது, தன்னைப் போல் எளியவனையும் உயரத்தில் அமர்த்தி அழகு பார்ப்பது பெரியார் மண்ணுக்கே உரிய பெருந்தன்மை என நெகிழ்ந்து புகழாரம் சூட்டினார்.
கலைத்திருவிழா (KG முதல் 9-ஆம் வகுப்பு வரை): தொடர்ந்து, எல்.கே.ஜி முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்களின் பன்முகத் திறமையை வெளிப்படுத்திய இந்நடனங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. எல்.கே.ஜி பெற்றோர்களின் சிறப்பு நடன நிகழ்வும் விழாவின் மேன்மையைக் கூட்டியது.
இப்பட்டமளிப்பு விழாவில் 54 யு.கே.ஜி மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டு, சிறப்பு விருந்தினர் உறுதிமொழி வாசிக்க யூ.கே.ஜி மாணவர்கள் ஏற்புரை வழங்கியதைத் தொடர்ந்து, பதினோராம் வகுப்பு மாணவர் சே. ஆல்வின் ஜெரோன் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவடைந்தது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் உள்ளிட்டோர் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
