திருச்சி, பிப். 5– திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், அரசுப் பொதுத்தேர்வை எதிர்கொள்ள உள்ள 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான “உன்னைச் செதுக்கும் சிற்பி நீயே..” என்ற தலைப்பிலான சிறப்புத் தன்னம்பிக்கை பயிலரங்கம் 28.01.2026 அன்று மதியம் 1.30 மணியளவில் பள்ளியின் நாகம்மையார் கலையரங்கத்தில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர் உரை


இவ்விழாவில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் பி. சிராஜூதீன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவர்களின் எதிர்கால நலம் குறித்த மிக விரிவான மற்றும் ஆழமான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
அவரது உரையின் முக்கியச் சாராம்சங்கள்:
தேர்வு ஒரு திருவிழா
பொதுத்தேர்வு என்பது மாணவர்களை அச்சுறுத்தும் ஒரு நிகழ்வு அல்ல; அது உங்கள் உழைப்பை உலகிற்கு வெளிப்படுத்தும் ஒரு திருவிழா. அச்சத்தைத் தள்ளி வைத்துவிட்டு, முறையான கால அட்டவணை மற்றும் திட்டமிடலுடன் அணுகினால் முதலிடம் என்பது சாத்தியமே!
ஒரு சிற்பிக்குக் கல்லின் மீது எவ்வளவு அக்கறை இருக்குமோ, அதைவிட மேலான அக்கறை ஆசிரியர்களுக்குத் தங்கள் மாணவர்கள் மீது உண்டு. ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களை வெறும் பாடமாகப் பார்க்காமல், வாழ்வின் பாடமாகக் கருதிப் பின்தொடர வேண்டும்.
“பெற்றோரிடம் எதையும் மறைக்காத மாணவனே உண்மையான வெற்றியை அடைகிறான்.” தோல்வியோ, தவறோ அல்லது மன அழுத்தமோ எதுவாக இருந்தாலும் முதலில் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். பெற்றோர்களிடம் காட்டும் வெளிப்படைத்தன்மை உங்களை தவறான பாதைகளில் இருந்து காக்கும் ஒரு கேடயமாகும்.
நட்பின் வலிமை
தவறான நட்பு ஒருவனின் வாழ்வையே திசைமாற்றிவிடும். உங்களை ஊக்கப்படுத்தும், நல்வழிப்படுத்தும் நண்பர்களைத் தேடிப் பிடியுங்கள். ‘எத்தனுக்கு எத்தன் வித்திலே இருப்பான்’ என்ற பழமொழியைப் போல, தந்திரங்களை விட நேர்மையும் உழைப்புமே நிலையான உயர்வைக் கொடுக்கும்.
கைப்பேசிப் பயன்பாடு
முற்றிலும் வேண்டாம்
தொழில்நுட்பம் வளர்ச்சி தரும் அதே வேளையில், அளவுக்கு மீறிய கைப்பேசிப் பயன்பாடு மாணவர்களின் ஒருமைப்பாட்டைக் குலைக்கிறது. குறிப்பாகத் தேர்வு நேரங்களில் சமூக வலைதளங்களில் நேரத்தைச் செலவிடுவது தற்கொலைக்குச் சமம். கைப்பேசி எனும் மாயவலையில் சிக்காமல் தற்காத்துக் கொள்ள வேண்டும்.
மாணவர்கள் மத்தியில் வரவேற்பு
பேராசிரியரின் கவித்துவமான மற்றும் நகைச்சுவை உணர்வு கலந்த பேச்சு மாணவர்களை வெகுவாகக் கவர்ந்தது. உரையின் இறுதியில் மாணவர்களின் கேள்விகளுக்குப் பேராசிரியர் மிகத் தெளிவாகப் பதிலளித்தார். தங்களுக்குள் இருக்கும் திறமைகளை அடையாளம் கண்டு, தங்களை தாங்களே செதுக்கிக்கொள்ளும் சிற்பிகளாக மாறப்போவதாக மாணவர்கள் உறுதி ஏற்றனர்.
பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்ட இந்தப் பயிலரங்கம், மாணவர்களிடையே ஒரு புதிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும் விதைத்து இனிதே நிறைவுற்றது.
