தைப்பூசத்தையொட்டி, ஆளுநர் ரவி எண்ணற்ற பக்தர்களுடன், வள்ளலார் என அன்புடன் அழைக்கப்படும் ராமலிங்க சுவாமிகளின் வடலூர் சத்திய ஞான சபையில் அருட்பெருஞ்ஜோதி சன்னதிக்குச் சென்றார்.
‘‘பாரதத்தின் ‘ஸநாதன’ மரபில், சுவாமி வள்ளலார் அவர்கள், நமது தேச வரலாற்றின் மிகவும் கடினமான காலகட்டத்தில் அவதரித்து, தனது நித்திய போதனைகள் மற்றும் செயல்கள் மூலம் சமூகத்தையும் தர்மத்தையும் காத்து, சமூகப் பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடினார். அனைத்து உயிரினங்களுடனும் நல்லிணக்கத்துடன் வாழ்வது எப்படி என்பதை நமக்குக் காண்பித்தார். மேலும், உலகளாவிய கருணையின் பாடத்தை நமக்குக் கற்பித்தார். அவரது போதனைகள், வளர்ச்சியடைந்தபாரதம்2047 -க்கான பாதைக்கு ஒளியூட்டுகின்றன.’’
– இவ்வாறு ஆளுநர் ஆர்.என். ரவி சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.
இதற்குக் கண்டனம் தெரிவித்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கமும், தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கமும் அறிக்கை வெளியிட்டுள்ளன.
‘‘சமத்துவ மண்ணான தமிழ்நாட்டின் சமத்துவ சமயக் கோட்பாடுகளைத் தொடர்ந்து திருடி ஸநாதனக் கோட்பாட்டின் அடிப்படையில் ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது பார்ப்பனியம். திருவள்ளுவர் தொடங்கி, அய்யா வைகுண்டர் (இன்று) வள்ளலார் வரையில் அவர்களின் திருட்டு தொடர்கிறது.
ஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ரவி, பிஜேபி இணைந்து நடத்தும் இக்கூத்தினை அறிவார்ந்த சமத்துவ நெறி கொண்ட தமிழ்நாட்டின் ஆன்மிக மரபு நிராகரிக்கிறது.
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழ்நாட்டின் கோயில்களை பார்ப்பனியப் பிடியிலிருந்து மீட்கப் போராடிவரும் மாபெரும் திராவிட இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. மற்றும் ஆளுநர் ரவியின் கூட்டம் அதன் ஒரு பகுதியாக சமத்துவ தமிழ் மரபுகளை கையகப்படுத்தும் வேலையைச் செய்து வருகிறது.
சிதம்பரத்தில் பட்டியல் சமூகத்தினருக்கு பூணூல் போடுவது, வள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது, வள்ளலாரை ஸநாதன சிமிழுக்குள் அடைப்பது, வைகுண்டர், திருவள்ளுவரை எப்படி பார்ப்பனிய மயமாக்குவது என்ற ஆன்மிக சித்து வேலைகளை, பார்ப்பனிய அயோக்கியத்தனங்களை தமிழ்நாட்டின் சமத்துவ ஆன்மிகம் உறுதியாக நிராகரிக்கிறது.
‘‘ஜாதி ஒழிப்பு சிந்தனை,
பசிப்பிணிக்கு எதிரான அரசியல்,
ஜீவகாருண்யம் – சமூக நலக் கொள்கை,
மத அதிகாரத்திற்கு எதிரான நிலைப்பாடு ஆகியவற்றுடன்
ஆன்மிகத்திலும் சமூகத்திலும் பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்றவர் வள்ளலார்.
வள்ளலார் பாடியருளிய நடராஜபதி மாலையில் வெளிப்படையாகவே ‘சமய மதத்தைப் பேய்’ என்று கூறியுள்ளார்.
ஆறாம் திருமுறையின் உரை நடையை படித்து உண்மையை உணர்ந்து தெளிந்தால் ஸநாதனமும் சுத்த சன்மார்க்கமும் வேறு வேறு என்பது தெளிவாக தெரியும்.
ஸநாதனத்திற்கும் சுத்த சன் மார்க்கத்திற்கும் சம்பந்தமே இல்லை – ஸநாதனத்தை ஒழிக்க வந்தது வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் என்பதை நம்மால் சான்றுகளோடு நிறுவ முடியும்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ – ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற மாபெரும் சமத்துவ மரபு கொண்ட தமிழ் ஆன்மிக சமூகத்தின்மீது ஆர்எஸ்எஸ், பாஜக, ஆளுநர் ரவி ஸநாதன ஸ்டிக்கர் ஒட்டும் அரசியலை – மோசடியான ஆன்மி கத்தை கடுமையாக எதிர்க்கிறது – வன்மையாகக் கண்டிக்கிறது.
பட்டியல் சமூகத்தினருக்கு பூணூல் போட்டு, பார்ப்பனிய சிமிழிக்குள் அடைக்கும் ஆர்.என். ரவி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் தேவாரம், திருவாசகம் பாட பட்டியல் சமூகத்தை அனுமதிப்பாரா? தீட்சதர்களிடம் பேசுவாரா? தமிழ்நாடு முழுக்க உள்ள சைவ, வைணவ கோயில்களில் பிறப்பால் பார்ப்பனர் தவிர மற்ற கவுண்டர், தேவர், நாடார், வன்னியர், ஆதிதிராவிடர் உள்ளிட்ட இந்து தமிழ் ஜாதியினரை அர்ச்சகராக்கக் கோரிக்கை வைப்பாரா? உண்மையில் இந்துக் களுக்கான கட்சி பா.ஜ.க. எனில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக பா.ஜ.க. குரல் கொடுக்காதது ஏன்? தனது பார்ப்பனிய, ஸநாதன வைதீக ஆன்மிகத்தில் நம்பிக்கை அற்று, மாபெரும் தமிழ் சமய மரபை களவாடும் இக்கூட்டத்தை 2026 தேர்தலில் மொத்தமாக முறியடிப்போம்!
2026 தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி மட்டுமல்ல – ஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஆர்.என். ரவியையும் வீட்டுக்கு அனுப்ப தமிழ் ஆன்மிக உலகம் கோயில், கோயிலாகச் சென்று தனது பணியைச் செய்யும்.
ஆரிய – பார்ப்பனியத்தை வீழ்த்துவோம்!
கோயில்களில் சமத்துவத்தை நிலைநாட்டப் போராடுவோம்!’’
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வா. ரங்கநாதன் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
