வல்லம், பிப்.3- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) சார்பில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை (ECE) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகம் மற்றும் நிறுவன புதுமை குழு (IIC) இணைந்து செயற்கை நுண்ணறிவு (AI) சகாப்தத்தில் ஆராயச்சி முறை புள்ளிவிவர பகுப் பாய்வு மற்றும் நெறிமுறை வெளியீடு என்ற மய்யக் கருத்தின் கீழ் 3 ஆவது பன்னாட்டு ஆய்வு முன்னணி கருத்தரங்கு அய்ன்ஸ்டீன் அரங்கில் கலப்பு முறையில் (Hybrid Model) நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் இந்தியா மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்த 30 கல்வி நிறுவனங்களில் இருந்து 300 க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். கருத்தரங்கம் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலக இயக்குநர் முனைவர் பாலகுமார் பிச்சையின் வரவேற்புடன் தொடங்கியது. நிகழ்வை பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் வெ.இராமச்சந்திரன் தொடங்கி வைத்து செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) யுகத்தில் ஒழுக்கமான ஆய்வு நடைமுறைகள் மற்றும் தரமான அறிவியல் வெளியீடுகளின் அவசியத்தை வலியுறுத்தினர். இணைத் துணைவேந்தர் முனைவர் இரா.மல்லிகா பாரம்பரிய அறிவும் நவீன தொழில்நுட்பமும் ஒருங்கிணையும் ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) நிர்வாகக் குழு உறுப்பினர் முனைவர் வீ.அன்புராஜ் ஆராய்ச்சி உற்பத்தித்திறனை மேம்படுத்தும் மாற்றுத் திறன் தலைமைத்துவம் என்ற தலைப்பில் முக்கிய உரை வழங்கி புத்தாக்கம், புதிய சிந்தனை, புது உலகு என்ற முழக்கத்தையும் தந்தை பெரியாரின் கேள்வி எழுப்பும் அணுகு முறையையும் ஆராய்ச்சியுடன் இணைந்து உரை யாற்றினார். பதிவாளர் முனைவர் பி.கே.சிறீவித்யா கல்வி ஆராய்ச்சி சமூக மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) சார்ந்த கருத்து ஆராய்ச்சி தலைமைத்துவம், சமூக மாற்றத்திற்கு ஆய்வின் பங்கு ஏஅய் சார்ந்த இலக்கியத் தேடல், சிக்கல் அடிப்படையிலான ஆராய்ச்சி ஏஅய் / மிசின் லேர்னிங் மூலம் தரவுப் பகுப்பாய்வு மற்றும் ஏஅய் காலகட்டத்தில் ஆய்வு நெறிமுறைகள் ஆகிய தலைப்புகளை முனைவர் கவுரா ஜெகதீஷ் (ஓய்வு பெற்ற மூத்த நிபுணர், US FDA, USA), முனைவர் பாலகுமார் பிச்சை (இயக்குநர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகம், முனைவர் சரவணன் பாண்டியராஜ் (கிங் சவுத் பல்கலைக்கழகம், சவுதி அரேபியா), முனைவர் சுபாதா நகரகர் (சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகம், புனே) மற்றும் முனைவர் பா.இளங்கோவன், (துணை இயக்குநர் – IQAC PMIST) ஆகியோர் பகிர்ந்துகொண்டனர்.
2025ஆம் ஆண்டின் பல்கலைக் கழக ஆராய்ச்சி பங்களிப்பிற்காக முனைவர் ந.ஜெயந்தி, முனைவர் து.உமாமகேஸ்வரி மற்றும் முனைவர் மு.ஹரிகுமரன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறைத் தலைவர் முனைவர் செ.ஜனனி நன்றியுரை வழங்கினார்.
