சென்னை, பிப். 2– தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.12 ஆயிரம் கோடி வரை பன்னாட்டு காலணி நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளதாக, தோல் ஏற்றுமதி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் செல்வம் தெரிவித்தார்.
இந்திய பன்னாட்டு தோல் மற்றும் தோல் பொருட்கள் 39ஆவது கண்காட்சி, சென்னை வர்த்தக மய்யத்தில் நேற்று (1.2.2026) தொடங்கி பிப். 3ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதுகுறித்து, தோல் ஏற்றுமதி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் செல்வம், செய்தியாளர்களிடம் நேற்று முன்தினம் (31.1.2026) கூறியதாவது:
கண்காட்சியில் தோல் பொருட்கள் மற்றும் காலணிகள் தொடர்பான அனைத்து மூலப்பொருட்களும், ரசாயன இயந்திரங்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இதில், ஜெர்மனி மற்றும் இத்தாலி நாடுகளின் தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைப் போலவே புதிதாகக் கட்டப்பட்ட அரங்குகளிலும் கண்காட்சி அரங்குகள் இருக்கும்.
இந்தியா – அய்ரோப்பிய வர்த்தக ஒப்பந்தம், நமது தோல் தொழிலுக்கு ஒரு பெரிய வாய்ப்பாகும். அய்ரோப்பிய ஒன்றியம், 43 சதவீதம் அளவுக்கு இந்தியாவில் இருந்து தோல் பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. தோல் மற்றும் காலணி துறையில் தேசிய மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க ஒரு விரிவான திட்டம் செயல்படுத்த வேண்டுமென ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், 2030ஆம் ஆண்டுக்குள் 50 பில்லியன் டாலர் வரை வருவாய் இலக்கை அடைய முடியும்.
தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திண்டிவனம், செய்யாறு உள்ளிட்ட இடங்களில் பன்னாட்டு காலணி நிறுவனங்கள் தொழிற்சாலைகளைத் தொடங்கியுள்ளன. பன்னாட்டு காலணி நிறுவனங்கள், தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளன. இதன்மூலம், 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. இந்த ஆண்டு ஒன்றிய பட்ஜெட்டில் ‘கிரஸ்ட் லெதர்’ (Crust Leather) மீதான இறக்குமதி வரியை நீக்க வேண்டுமென்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது தோல் ஏற்றுமதி குழுமத்தின் தெற்கு பிராந்திய தலைவர் அப்துல் வஹாப், இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் பொது மேலாளர் பிரிஜ்லால் மற்றும் இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் ஓஎஸ்டி (OSD) துறை தலைவர் ஹர்ஷ் கென்டில்யா ஆகியோர் இருந்தனர்.
