இந்தியாவின் மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங் களில் சமூக நீதி மற்றும் இடஒதுக்கீட்டை நிலை நாட்டுவதில் தமிழ்நாடு தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. ஒன்றிய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நீதிபதிகள் நியமனத்தில் விளிம்புநிலை மக்களின் பிரதிநிதித்துவம் தமிழ் நாட்டில் மிக உயர்ந்த மட்டத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ பதிவின்படி, இந்தியா முழுவதும் உள்ள மொத்தம் 20,833 மாவட்ட மற்றும் துணை நீதிமன்ற நீதிபதிகளில்: 45.76% (9,534 பேர்) தாழ்த்தப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள்.
இதில் தாழ்த்தப்பட்ட பிரிவினர் 14.15%, பழங்குடி யினர் 5.12% மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவகுப்பினர் 26.64% ஆக உள்ளனர்.
மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் நீதித்துறைப் பணியிடங்களில் சமூகப் பிரதிநிதித்துவம் வியக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த 1,234 நீதிபதிகளில், 1,205 பேர் (97.65%) இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில்இதர பிற்படுத்தப்பட்டோர் – 935 பேர் (75.76%); தாழ்த்தப்பட்ட வகுப்பினர் – 255 பேர் (20.66%); பழங்குடியினர் –15 பேர் (1.21%); பொதுப்பிரிவு 29 பேர் (2.35%).
சமூக நீதியைப் பின்பற்றுவதில் தென்மாநிலங்கள் இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்கின்றன. தமிழ்நாட்டைத் தொடர்ந்து கருநாடகா (88.82%), ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களும் நீதித் துறையில் அதிகப் பிரதிநிதித் துவத்தைக் கொண்டுள்ளன. 97 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்புடன் தமிழ்நாடு இந்திய அளவில் தனித்து நிற்கிறது.
தமிழ்நாட்டில் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் 69% இடஒதுக்கீட்டுக் கொள்கை மற்றும் “அனைவருக்கும் அனைத்தும்” என்ற திராவிட மாடல் ஆட்சியின் விளைவாகவே நீதித்துறையில் இந்த மாற்றம் சாத்தியமாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். அதிகாரப் பகிர்வில் அனைத்துச் சமூகத்தினருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படுவதை இந்தத் தரவுகள் மெய்ப்பிக்கின்றன.
ஆனாலும் சென்னை, மதுரைக் கிளை உயர்நீதிமன்றங்களைப் பொறுத்தவரை, சமூகநீதி என்பது அடி பாதாளத்தில்தான் உள்ளது. இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. ஒரு கால கட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர்.
2018–2025 கால கட்டத்தில் இந்திய அளவில் இந்தியா முழுமையும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 715 ஆகும். இவர்களில் தாழ்த்தப் பட்டவர்கள் வெறும் – 22 பேர் (3%) மட்டுமே! பழங்குடியினர் எண்ணிக்கை –16 பேர் (2%); இதரப் பிற்படுத்தப்பட்டோர் 88 பேர் (12%); பொதுப் பிரிவில் (பெரும்பாலும் பார்ப்பனர்கள்) 75 விழுக்காடாகும்.
ஒரு கால கட்டத்தில் மாநில அரசுகளின் பரிந்துரைகளோடு உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் இருந்தது. இப்பொழுது ‘கொலிஜியம்’ என்ற முறை வந்த பின், உயர்ஜாதியினரின் ஆதிக்கம் தலைதூக்கி நிற்கிறது.
பாலியல் ரீதியான நீதியும் படுமோசமாகவே உள்ளது – வெறும் 14 விழுக்காடே!
அதே நேரத்தில் கீழமை நீீதிமன்றங்களில் தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் நீதிபதிகள் அதிக அளவில் தமிழ்நாட்டில் சிறப்பாகப் பணியாற்றுகின்றனர் என்றால், தந்தை பெரியாரின் தமிழ் மண்ணுக்கே உரித்தான ‘சமூகநீதிக் கொடி’ பட்டொளி வீசிப் பறப்பதுதான்.
வேறு எந்தத் துறைகளையும்விட உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றத்தில் சமூகநீதி என்பது மிக மிக இன்றியமையாதாகும்.
‘இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் கூடாது’ என்று இந்திய அரசமைப்புச் சட்டம் தெளிவாகக் கூறி இருந்தும், அதற்கு மாறான தீர்ப்புகள் வருகின்றன என்றால், அதற்கு முக்கியக் காரணம் உயர் மட்ட நீதித்துறைகளில் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு இல்லாமையே! நாடாளுமன்றத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினரின் பெரிய எண்ணிக்கையில் இருந்தும், இந்த நிலை நீடிப்பது பெரும் அவலமே!
