சென்னை, நவ.6- ஆயிரம் விளக்கு தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.1 கோடியே 9 லட்சத்தில் மாநகராட்சி சார்பில் கோபால புரம் விளையாட்டுத் திடலில் கிரிக்கெட் மைதானம் அமைய உள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேனாம்பேட்டை மண்டலம், 111-ஆவது வார்டில் கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தில் கிரிக் கெட் விளையாட்டை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக இந்த மைதானத்தில் 3இல் 2 பங்கு இடத்தில் கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது.
அதற்கான நிதியை ஆயிரம்விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ந.எழிலன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியே 9 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான பணிகள் தொடங்கு வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குத்துச்சண்டை மய்யம்
இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் குத்துச்சண்டை விளையாட்டுப் பயிற்சி பெறும் வகையில், இந்த விளையாட்டு மைதானத்தில் 3இல் ஒரு பங்கு பகுதியில் மட்டும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் குத்துச் சண்டை விளையாட்டுப் பயிற்சி மய்யம் அமைக்கப்பட உள்ளது.
இந்த 2 பணிகளும் முடிவடையும் போது, இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டுப் பயிற்சி யையும், குத்துச்சண்டை விளையாட்டுப் பயிற்சியையும், இதர வகையான விளையாட்டுப் பயிற்சிகளையும் மேற் கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.