சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் நினைவைப் போற்றும் வகையில் சென்னையில் சிலை அமைக்கப்படும்!

Viduthalai
7 Min Read

சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அரசு, தமிழ்நாடு

சென்னை,ஏப்.20- “மேனாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர் களின் நினைவைப் போற்றும் வகையில், சென்னையில் அவரது முழு உருவ கம்பீரச் சிலை அமைக்கப்படும்”   என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன்கீழ் தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது,

மேனாள் பிரதமர், சமூகநீதிக் காவலர்,  இந்தியா முழுமைக்கும் பிற்படுத்தப்பட்ட மக் களின் பிதாமகர், மறைந்த வி.பி.சிங் அவர் களுக்கு, இந்த ‘திராவிட மாடல்’ அரசு மரியாதை செய்ய நினைக்கும் மகத்தான அறிவிப்பை இந்த மாமன்றத்தில் தங்கள் அனுமதியோடு 110 விதியின்கீழ் வெளியிட விரும்புகிறேன்.

உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டத்தில், மிகப்பெரிய ஜமீன்தாரரான ராஜா தயா பகவதி பிரதாப் சிங் அவர்களுக்கு மகனாகப் பிறந்தவர்தான் விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்கள். ஆடம்பர வாழ்க்கை வாய்த்தாலும், அதில் மனம் ஒட்டாமல் கல்லூரி படிக்கும் காலத்திலேயே காந்திய இயக்கத்தில் ஈடுபட்டார்; சர்வோதய சமாஜில் இணைந்தார்; பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்தார்; தனது நிலங்களையே தானமாக வழங்கினார். 

1969-ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச சட்ட மன்றத் தேர்தலில் நின்று வென்றார்.   உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர்; ஒன்றிய வர்த்தக அமைச்சர்; வெளியுறவுத் துறை அமைச்சர்; நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய உயர் பொறுப்புகளை வகித்தார்.  தேசிய முன்னணியை உருவாக்கி 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராகவே ஆனார்.  வி.பி.சிங் பிரதமராக இருந்தது பதி னோரு மாதங்கள்தான் என்றாலும், அவர் செய்த சாதனைகள் மகத்தானவை.  அதனால் தான் அவரை இந்த மன்றத்தில் இப்போதும் போற்றிக் கொண்டு இருக்கிறோம்.

இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக் கப்பட்டபோது தாழ்த்தப்பட்ட,  பழங்குடியின ருக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்களில் தனி இடஒதுக்கீடு தரப்பட்டது. ஆனால், பிற்படுத் தப்பட்ட மக்களுக்கு, அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு தரப்படவில்லை. இதனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணை யம்தான் ஙி.றி. மண்டல் தலைமையிலான ஆணையம்.  சமூகரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்துக்கு, ஙி.றி. மண்டல் பரிந்துரையின் ஒன்றிய அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற உத்தரவை அமல்படுத்திய சமூகநீதிக் காவலர்தான் வி.பி.சிங் அவர்கள். 

அவர் பிறப்பால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல; ஏழை – எளிய குடும்பத்தைச் சேர்ந்தவரும் அல்ல; ஆனாலும் செய்து காட்டியவர் வி.பி.சிங் அவர்கள்.    மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை அமல்படுத்தப் போகிறேன் என்று ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் வி.பி.சிங் அறிவித்தபோது, ‘முற்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஒருவரால் இதனைச் செய்ய முடியாது’ என்று அமைச்சர் ஒருவரே சொன்னபோது, ‘இதோ, இப்போதே தேதியைச் சொல்கிறேன்’ என்ற கம்பீரத்துக்குச் சொந்தக்காரர் வி.பி.சிங் அவர்கள்.   அதுதான் அவரது பதவிக்கே நெருக்கடியாக அமைந்தது. 

‘சில நேரங்களில் வாழ்வதைக் காட்டிலும் மரணத்தைத் தேர்ந்தெடுப்பதே நல்லது’ என்று சொல்லி பிரதமர் பதவியை விட்டு விலகியவர் ‘சுயமரியாதைச் சுடரொளி’ வி.பி.சிங் அவர்கள்.   ‘வி.பி.சிங்கை தூக்கில் கூடப் போட்டுக் கொள்ளுங்கள். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதியைக் கொடுங்கள்’ என்று கூறும் அளவிற்கு சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினரின் நலனில் அவர் அக்கறை கொண்டிருந்தார்.  பதவியிலிருந்த 11 மாத காலத்தில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு; தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கான தொடக்கப் புள்ளி; தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத் திற்கான தொடக்கப் புள்ளி; வேலை உரி மையை அரசியல் சாசன உரிமை ஆக்கியது; தேர்தல் சீர்திருத்தங்கள்;  மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில்;  தேசியப் பாதுகாப்புக் குழு; உழவர்கள் பிரச்சினையைத் தீர்க்க மூன்று குழுக்கள்;  டில்லி குடிசைப் பகுதி மக்களுக்கு வாழ்விடங்கள்; அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (விஸிறி)  அச்சிட வேண்டும்;  நுகர்வோர் பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் செய்து காட்டிய மாபெரும் சாதனையாளர்தான் வி.பி. சிங் அவர்கள்.  

தமிழ்நாட்டைத் தனது இரத்த சொந்தங்கள் வாழும் மாநிலமாக வி.பி.சிங் நினைத்தார்.  தந்தை பெரியாரைத் தனது உயிரினும் மேலான தலைவராக வி.பி.சிங் ஏற்றுக் கொண்டார்.  ‘ஒரு மனிதனுக்குச் சாவைவிட மிகக் கொடுமை யானது ‘அவமானம்’. அந்த அவமானத்தைத் துடைக்கும் மருந்துதான் பெரியாரின் ‘சுய மரியாதை’ என்று சொன்னவர் வி.பி.சிங் அவர்கள்.   தலைவர் கலைஞர் அவர்களைச் சொந்த சகோதரனைப் போல மதித்தார்.   ”எனக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் என் பக்கத்தில் இருந்து கலைஞர் என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். தனது ஆட்சியைப் பற்றிக் கூட பொருட்படுத்தாமல் ஒரு கொள்கைக்காக, இலட்சியத்துக்காக என் னோடு இருந்த மாபெரும் தலைவர் கலைஞர்” என்று பாராட்டியவர் வி.பி.சிங் அவர்கள்.  

அதற்கேற்றாற்போல், 21-8-1990 அன்று முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் இந்தப் பேரவையில் உரையாற்றியபோது, “இந்திய வரலாற்றிலேயே, புதியதொரு சகாப்தமாக சமூகநீதி வழங்கிடும், இந்தப் புரட்சிகரமான முடிவை எடுத்துள்ள தேசிய முன்னணி அரசுக்கும், பிரதமர் வி.பி. சிங் அவர்களுக்கும், இந்தப் பேரவை தனது இதயமார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது”  என வாழ்த்தி, இந்தச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, வி.பி. சிங் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.  

1988 ஆம் ஆண்டு தேசிய முன்னணி தொடக்க விழா சென்னையில் நடைபெற்றபோது, மாபெரும் ஊர்வலத்தை தலைமை தாங்கி நான் நடத்தி வந்தேன்.  பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வெள்ளுடை தரித்து அணிவகுத்த வீரக் காட்சியை மேடையில் இருந்தபடி பார்த்து வணங்கினார் வி.பி.சிங் அவர்கள். அவர் பிரதமர் ஆனபின்னர், டில்லி சென்றோம்; சட்டமன்றக் குழுவோடு நானும் சென்றேன். அப்போது என்னை அவரிடத்தில் அறி முகப்படுத்தினார்கள்.  “இவரை எனக்கு அறிமுகப்படுத்து கிறீர்களா?  இவரை எனக்குத் தெரியாதா? நீங்கள்தானே சென்னையில் இளைஞர் படையை அணிவகுத்து ஒரு மாபெரும் பேரணியை நடத்தி னீர்கள்!” என்று சொன்னது, என்னைப் பாராட்டியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய மிகப் பெரிய வாய்ப்பாக நான் கருதுகிறேன்.  

அத்தகைய சமூகநீதிக் காவலர் அளித்த ஊக்கத்தின், உற்சாகத்தின் காரணமாகத்தான் சமூகநீதிப் பார்வையில், சமூக நீதிப் பயணத்தில் கொஞ்சமும் சலனமும், சமரசமும் இல்லாமல் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.  மருத்துவப் படிப்பில் அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் இதர பிற் படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு அளிக்க வேண் டும் என்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதி மன்றத்திலும் தி.மு.க. போராடியதை நான் அதிகம் விளக்கத் தேவையில்லை.

இட ஒதுக்கீடு கிடையாது என்று சொல்லி வந்த ஒன்றிய அரசை, 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு ஒப்புக்கொள்ள வைத்தது, தி.மு.க. உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் நடத்திய போராட்டங்கள்தான்.   அதனை மனதில் வைத்துத்தான், அகில இந்திய அளவில் சமூக நீதிக்கான கூட்டமைப்பை உரு வாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். அதற்கான முதல் கூட்டமானது காணொலி மூல மாக நடந்திருக்கிறது. அகில இந்திய அளவில் பெரும் பாலான கட்சிகள் அதில் பங் கெடுத்தன. அகில இந்தியா வுக்கே தமிழ்நாடுதான் வழி காட்ட வேண்டும் என்று அக் கட்சிகள் அழைப்பு விடுத் துள்ளன.  தமிழ்நாட்டின் ஒடுக் கப்பட்ட மக்களுக்கு மட்டு மல்ல; இந்தியா முழுமைக் குமான அனைத்து மக்களுக் காகவும் குரல் கொடுத்து வருகிறோம். சி.ஆர்.பி.எப். தேர்வானது இந்தி, ஆங்கி லத்தில் மட்டும்தான் நடை பெறும் என்று அறிவிக்கப் பட்டது. தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச் சருக்கு நான் கடிதம் அனுப்பி வைத்தேன். தி.மு.க. மாணவ ரணியும், இளைஞரணியும் மிகப்பெரிய ஆர்ப்பாட்ட அறிவிப்பைச் செய்தார்கள். தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் சி.ஆர்.பி.எப். உள்ளிட்ட அனைத்து மத்திய ஆயுதக் காவல் படைத் தேர்வுகளும் நடைபெறும் என்ற வெற்றிச் செய்தி நமக்குக் கிடைத்திருக்கிறது.  

அனைத்து வகையிலும் சமூகநீதியை நிலைநாட்டும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.  இத்தகைய கொள்கை உரத்தை வழங்கியவர்களில் ஒருவர் வி.பி.சிங் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.  தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப் பிரச்சினையான காவிரி நீருக் காக நடுவர் மன்ற ஆணையத்தை அமைத்துத் தந்தவர் வி.பி.சிங் அவர்கள்.  இலங்கைப் பிரச்சி னைக்குத் தீர்வுகாண தனது இல்லத்தில் அகில இந்தியத் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டி ‘இப்போது கலைஞர் சொல்லப் போவதுதான் என் கருத்து’ என்று சொன்னவர் வி.பி.சிங் அவர்கள்.

சென்னை கடற்கரையில் நடைபெற்ற ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தில், தலைவர் கலைஞர் அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று, சென்னையில் அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட்டிய ஒப்பற்ற தலைவரான வி.பி.சிங் அவர்களின் நினைவைப் போற்றும் வகையிலும், அவருக்குத் தமிழ்ச் சமுதாயத்தின் நன்றியைத் தெரிவிக்கும் வகையிலும் சென்னையில் அவரது முழு உருவ கம்பீரச் சிலை அமைக்கப்படும் என்பதை மிகுந்த பெருமிதத்தோடு, இந்த மாமன்றத்தில் அறிவிக்க விரும்புகிறேன்.

உயர் வர்க்கத்தில் பிறந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகச் சிந்தித்த, எத்தனை உயர் பதவி வகித்தாலும் கொள்கையை விட்டுத் தராத, டயாலிசிஸ் செய்யப்பட்ட உடல்நிலையிலும் ஏழை மக்களுக்காக வீதிக்கு வந்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்த வி.பி.சிங் அவர்களது புகழ் வாழ்க, வாழ்க, வாழ்க என்று கூறி அமைகிறேன். 

-இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *