சென்னை, பிப். 1– பள்ளி ஆசிரியர் பணித் தகுதிக்கான ‘டெட்’ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு 1.50 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆசிரியர்கள் தங்களது தேர்ச்சி சான்றிதழை நாளை (பிப்.2) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டிஆர்பி தெரிவித்துள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைத்து விதமான பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறவேண்டும். இந்த தேர்வு மொத்தம் 2 தாள்களை கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுவோர் இடைநிலை ஆசிரியராகவும், 2ஆம் தாளில் தேர்ச்சி பெறுவோர் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்படுகிறது.
கடந்த 2025ஆம் ஆண்டுக்கான டெட் தேர்வு கடந்த நவம்பர் 15, 16ஆம் தேதிகளில் நடைபெற்றது. 4.24 லட்சம் பேர் தேர்வு எழுதினர். மொத்தம் 150 மதிப்பெண்கள் கொண்ட டெட் தேர்வில் தேர்ச்சி பெற, பொதுப் பிரிவினர் 60 சதவீதமும் (90 மதிப்பெண்), இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 55 சதவீதமும் (82 மதிப்பெண்) எடுக்க வேண்டும். ஆந்திரா, தெலங்கானா, ஒடிசாவைப் பின்பற்றி, தமிழகத்திலும் சமீபத்தில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு டெட் தேர்ச்சி மதிப்பெண் 5 சதவீதம் வரை குறைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், டெட் தேர்வு முடிவுகளை டிஆர்பி நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது. தேர்வு முடிவு விவரங்களை http://trb.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஆசிரியர்கள் தங்களது தேர்ச்சி சான்றிதழை நாளை (பிப்.2) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டிஆர்பி தெரிவித்துள்ளது.
டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பற்றிய தரவுகளும் வெளியாகியுள்ளன. முதல் தாள் தேர்வை 92,417 பேர் எழுதிய நிலையில், 45,469 பேர் (49.20%) தேர்ச்சி பெற்றுள்ளனர். 2-ம் தாள் தேர்வை 3 லட்சத்து 31,900 பட்டதாரிகள் எழுதிய நிலையில், ஒரு லட்சத்து 4,604 பேர் (31.5%) தேர்ச்சி பெற்றனர்.
முந்தைய டெட் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் 10-15 வரை மட்டுமே இருந்தது. இந்த முறை வினாத்தாள் வழக்கத்தைவிட மிகவும் எளிதாக இருந்ததுடன், தேர்ச்சி மதிப்பெண்களும் குறைக்கப்பட்டதால், தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது.
மேலும், பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் டெட் தேர்ச்சி கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பரில் உத்தரவிட்டது. இதனால், தற்போது பணியில் உள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் கடந்த நவம்பரில் டெட் தேர்வு எழுதினர். அவர்களில் பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஏராளமான ஆசிரியர்கள் ஓரிரு மதிப்பெண்களில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். அதேநேரம், வினாத் தாளில் தவறாக இடம்பெற்ற சில கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அத்தகைய தவறான வினாக்களுக்கு மதிப்பெண் அளிக்க வேண்டும் என்று பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்திர திட்டத்தின்படி, இந்த ஆண்டில் 2 முறை டெட் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
