அமெரிக்கத் தூதரக அதிகாரியின் தந்திகளை எடுத்துக் காட்டி ‘தி இந்து’ நாளேடு தரும் செய்தி
அவசரநிலைப் பிரகடனத்தையொட்டி, தமிழ்நாட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு கலைக்கப்பட்டது குறித்த செய்திக் கட்டுரை ஒன்று நேற்றைய (31.01.2026) ‘தி இந்து’ ஆங்கில ஏட்டில் வெளியாகியுள்ளது.
குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு, அவர் சார்பாக நிர்வாகத்தை நடத்தும் ஆளுநருக்கு ஆலோசகர்களாக இரண்டு பார்ப்பனர்கள் நியமிக்கப்பட்டனர். அக் காலகட்டத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் எப்படிக் கொட்டமடித்தனர் என்பதைப் படம்பிடித்துள்ளது அந்தச் செய்தி!
இதோ அந்தப் பகுதியின் தமிழாக்கம்:
பெட்ரோலிய அமைச்சகத்தின் செயலாளரான பி.கே.தவே மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் துறைச் செயலாளர்களில் ஒருவரான ஆர்.வி. சுப்ரமணியன் ஆகியோரை, மாநில நிர்வாகத்தை நிர்வகிப்பதற்காக ஆளுநரின் ஆலோசகர்களாக அன்றைய ஒன்றிய அரசு நியமித்தது.
அப்போது (1976-இல்) ‘தி இந்து’ நாளிதழில் வெளியான ஒரு செய்தி, “திறமையான நிர்வாகம் உடையது என்னும் பழைய நற்பெயரை மீட்டெடுப்பதற்குத் தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி, நல்ல பலனைத் தரும் என்பதே டில்லியில் நிலவும் பொதுவான எதிர்பார்ப்பு. இந்த இரண்டு ஆலோசகர்களின் தேர்வு, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் அதே வேளையில், பொருளாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற ஒன்றிய அரசின் விருப்பத்தை தெளிவாகக் காட்டுகிறது” என்று கூறியது.
டில்லிக்குக் கிடைத்த தகவல்களின்படி, குடியரசுத் தலைவர் ஆட்சிக் கலைப்புப் பிரகடனத்தில் கையெழுத்திட்ட உடனேயே அந்த இரண்டு ஆலோசகர்களும் சென்னையில் பொறுப்பேற்றுக் கொண்டனர் என்று அந்தச் செய்த கூறியது. “திமுக நிர்வாகத்திலிருந்து குடியரசுத் தலைவர் ஆட்சிக்குச் சுமூகமான மாற்றம் ஏற்படுவதை உறுதி செய்வதற்காக, அவர்கள் சட்டம் – ஒழுங்கு நிலவரத்தைக் கையாள்வதில் சிறிதும் தாமதிக்கவில்லை. எந்தவொரு அரசாங்கத்தின் முதன்மைப் பொறுப்பான அமைதியையும் நல்லிணக்கத்தையும் பராமரிக்க, ஒன்றிய அரசு சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது,” என்று தி இந்து செய்தி கூறியது.
‘பிராமணச் சாயல்’
தற்செயலாக, சில மாதங்களுக்குப் பிறகு, அப்போதைய ராஜ்யசபா துணைத் தலைவரான கோடே முராரி (காங்கிரஸ்), குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் மாநில அரசாங்கத்தில் அதிகரித்து வரும் “பிராமணச் சாயல்” குறித்து ஒரு மூத்த அமெரிக்கத் தூதரக அதிகாரியிடம் தெரிவித்திருந்தார்.
ஏப்ரல் 2013-ஆம் ஆண்டு பொது வெளிக்கு வந்த கிஸ்ஸிங்கர் காலத்து விக்கி லீக்சில், அமெரிக்கத் தந்தி ஒன்றின்படி, தமிழ்நாட்டுக்குப் பலமுறை பயணம் செய்த முராரி, அப்போதைய காங்கிரஸ் தலைவர் டி.கே. பரோவா மற்றும் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் ஓம் மேத்தா ஆகியோரிடம் இது குறித்து எச்சரித்திருந்த்தாகக் குறிப்பிடுகிறது. “தவே, சுப்ரமணியன் ஆகிய இரண்டு பார்ப்பன ஆலோசகர்களை அனுப்பியது ஒரு தவறு என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்,” என்று முராரி அந்த அமெரிக்கத் தூதரிடம் கூறியிருந்தார். அய்.ஏ.எஸ் அதிகாரிகளின் இடமாற்றம் காரணமாக, 14 அரசுச் செயலாளர்களில் 12 பேரும், மாவட்ட ஆட்சியர்களில் 80 சதவீதத்தினரும் பார்ப்பனர்களாக நியமிக்கப்பட்டிருப்பதாக முராரி கூறியிருந்தார். இதில், “உள்நோக்கத்துடன் சுப்ரமணியம் செயல்படுகிறார்” என்று முராரி உணர்ந்ததாகவும், உள்ளூர் காங்கிரஸ் (ஆர்) தலைவர்கள் (இந்திரா காந்தி தலைமையிலான அணியினர்) கூட இதனால் அதிருப்தி அடைந்திருந்தனர்” என்று அந்தக் கட்டுரையில் பழைய செய்திகளைச் சுட்டிக் காட்டியுள்ளனர்.
முராரியின் கருத்துக்களை “முழுமையாக” ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், பார்ப்பன அதிகாரிகளுக்குச் சாதகமான சாய்வை அமெரிக்கத் துணைத் தூதர் ஒப்புக்கொண்டு புதுடில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்குத் தகவல் தெரிவித்திருந்தார் என்றும் அச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொஞ்சம் இடம் கிடைத்தாலும் பார்ப்பன ஆதிக்கம் எப்படி நடந்துகொள்ளும் என்பதற்கும், அதிலும் பார்ப்பனர்கள் எப்படியெல்லாம் அதிகாரப் பதவிகளில் அமர்த்தப்படுவார்கள் என்பதற்கும் அவசரநிலைக் காலம் ஒரு முக்கியமான எடுத்துக்காட்டாகும்.
– சமா இளவரசன்
