சென்னை, ஜன.31 நவம்பர் மாதம் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் ஒன்றுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.4 லட்சத்து 25 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய நிலையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. குறைக்கப்பட்ட தகுதி மதிப்பெண் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தகுதி பெற்ற தேர்வர்கள் பிப்ரவரி 2 மாலை முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.gov.in தகுதிச் சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) தகுதிப் பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வு அந்தந்த மாநிலங்களில் மூலம் நடத்தப்படுகிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் இத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தி வருகிறது. 2 தாள்கள் கொண்டு இத்தேர்வு நடத்தப்படும். முதல் தாள் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையும், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை இரண்டாம் தாளும் நடத்தப்படுகிறது. டெட் 2025 தேர்வு முடிவுகளை www.trb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக அறிந்து கொள்ளலாம்.
கீழடியில் தென்னந்தோப்புக்குள் பிரமிப்பூட்டும் திறந்தவெளி
அகழ் வைப்பகம்!
திருப்புவனம், ஜன.31 கீழடியில் தென்னந்தோப்புக்குள் பிரமிப்பூட்டும் வகையில் திறந்தவெளி அகழ் வைப்பகம் அமைந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 கட்ட அகழாய்வுகள் நடைபெற்றன.
இதன்மூலம் தமிழர் நாகரிகம் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கண்டறியப்பட்டது. மேலும், இங்கு கண்டறியப்பட்ட பல ஆயிரம் தொல்பொருட்களை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் கீழடியில் 31,000 சதுரஅடியில் ரூ.18.43 கோடியில் அகழ் வைப்பகம் அமைக்கப்பட்டது. இதை ஏராளமானோர் கண்டு வியந்து வருகின்றனர்.
இந்நிலையில் அகழாய்வு நடை பெற்ற இடத்திலேயே திறந்தவெளி அகழ் வைப்பகம் அமைக்க கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, 4, 5, 7 மற்றும் 8-ஆம் கட்ட அகழாய்வு நடந்த இடத்தில் ரூ.22 கோடியில் 5,917 சதுர மீட்டர் திறந்தவெளி அகழ் வைப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள அகழாய்வு குழிகளில் செங்கல் சுவர்கள், உறை கிணறுகள், பானை ஓடுகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கண்ணாடி மேற்கூரை மற்றும் தடுப்புகள், நடை பாலம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
தனியார் தென்னந்தோப்புக்கு மத்தியில் பிரமிப்பூட்டும் வகையில் அமைந்த திறந்தவெளி அகழ் வைப்பகத்தை ஜன.31-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைக்க உள்ளார்.
