தமிழ் மண்ணில் மொழிப்பற்றும், பகுத்தறிவுச் சிந்தனையும் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்தவர் வை. பொன்னம்பலனார். இவர் 1904-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் நாள் பிறந்தார்.
பெரியார் தொண்டர்
1939 வரை திருநீறு அணிந்து தேவாரம் பாடி வந்த பொன்னம்பலனாரின் வாழ்வில் 1940 ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தந்தை பெரியாரின் சொற்பொழிவுகளும், ‘குடிஅரசு’ இதழும் அவரை ஒரு தன்மானப் பகுத்தறிவாளராக மாற்றின. இதன் தாக்கத்தால் நெற்றிப்பட்டை தவிர்த்து, கருப்புச்சட்டையை வாழ்நாள் முழுவதும் அணிந்தார்.
“பாடாதே நிறுத்து!” – கொள்கை உறுதி
1952-இல் முசிறி மாவட்டக்கழக உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றியபோது ஒரு வரலாற்றுச் சம் பவம் நிகழ்ந்தது. பள்ளிக் கூட்டத்தில் ஒரு மாணவர் பாரதியாரின் பாடலைப் பாடும்போது, “ஆரியநாட்டினர் ஆண்மையோடு இயற்றும்…” என்ற வரியைக் கேட்டதும், பொன்னம்பலனார் ஆவேசத்துடன் “பாடாதே நிறுத்து!” என்று முழங்கினார்.
இதற்காக தலைமை ஆசிரியருடன் ஏற்பட்ட மோதல், அவரைப் பணிநீக்கம் செய்யும் வரை சென்றது. மாணவர் போராட்டங்களால் 23 மாத கால நீதிமன்றப் போராட்டத்திற்குப் பிறகு அவர் மீண்டும் பணியில் சேர்ந்தார். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அவரது அஞ்சாமையை உலகிற்குப் பறைசாற்றியது.
‘தமிழ் மறவர்’ விருது
பொன்னம்பலனாரின் தமிழ்த் தொண்டையும், துணிச்சலையும் பாராட்டி 28.07.1957 அன்று சேலம் தமிழ்ப் பேரவை ஒரு விழாவை நடத்தியது. அதில் தந்தை பெரியார் கரங்களால் பொன்னம்பலனாருக்கு “தமிழ் மறவர்” என்ற விருதும், அதே மேடையில் ஞா. தேவநேயப் பாவாணருக்கு “திராவிட மொழிநூல் ஞாயிறு” என்ற விருதும் வழங்கிக் சிறப்பிக்கப்பட்டது.
“தமிழ் வாழ வேண்டும், தமிழர் மானம் காக்கப்பட வேண்டும்” என்ற இலட்சியத்தோடு வாழ்ந்த தமிழ்மறவர் பொன்னம்பலனாரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
