திருச்சி, ஜன.29- விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் கொடையாக வழங்கப்பட்டு, 6 பேருக்கு பொருத்தப் பட்டது.
சாலை விபத்து
திண்டுக்கல் மாவட்டம் பாம்பலூரை சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் கடந்த 14ஆம் தேதி சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். அவரது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் திருச்சி மகாத்மாகாந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல், ஓரிரு நாள்களுக்கு முன் மூளைச்சாவு ஏற்பட்டது.
இதையடுத்து அவரது உறவினர்கள் அவருடைய உடல் உறுப்புகளை கொடை அளிக்க முன்வந்தனர். தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அவருடைய உறுப்புக்களான கல்லீரல், கணையம், சிறுகுடல், 2 சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் தோல் கொடையாகப் பெறப்பட்டது.
உடல் உறுப்புகள் கொடை
உடல் உறுப்பு வேண்டி பதிவு செய்தவர்களின் வரிசையின்படி, ஒரு சிறுநீரகம் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கும், மற்றொரு சிறுநீரகம் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கும், கல்லீரல் மதுரையில் உள்ள தனி யார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், கணையம் மற்றும் சிறுகுடல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், கண்கள் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபருக்கும், தோல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபருக்கும் கொடையாக வழங்கப்பட்டது.
