மிகப் பெரிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் சனிக்கோளைப் போட்டால் அது பந்தைப் போல மிதக்கும். சனிக்கோளின் வியக்கத்தக்க அடர்த்தி மற்றும் அதன் வாயு கட்டமைப்பே காரணம்.
விண்வெளியில் உள்ள கோள்கள் என்றாலே அவை மிகப்பெரிய பாறை களாலோ அல்லது வாயுக்களாலோ ஆன மிகவும் கனமான பொருட்கள் என்றுதான் நாம் நினைப்போம்.
ஆனால், நம் சூரிய குடும்பத்திலேயே ஒரு கோள் அதன் மிகக் குறைந்த அடர்த்தியின் காரணமாக, கோட்பாட்டு ரீதியாக தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டது. அது வேறு எந்தக் கோளும் அல்ல; வளையங்களுக்குப் புகழ்பெற்ற சனிக்கோள்தான்.
தண்ணீரில் மிதக்கும் சனிக்கோள்: சாத்தியமா?
நமது சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்தபடியாக 2ஆவது பெரிய கோளாக சனிக்கோள் உள்ளது. பூமியை விட 9 மடங்கு பெரியதாக இருந்த போதிலும், இதன் அடர்த்தி வியக்கத்தக்க வகையில் மிகவும் குறைவு. நீரின் அடர்த்தி 1 கன செ.மீ.-க்கு 1 கிராம் ஆகும்.
ஆனால், சனிக்கோளின் சராசரி அடர்த்தியோ வெறும் 0.69 கிராம்/கன சென்டிமீட்டர் மட்டுமே. சனிக்கோளைப் பிடிக்கும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய ‘குளியல் தொட்டி’ (Bathtub) இருந்தால், அதில் சனிக்கோள் ஒரு பந்தைப் போல மிதக்கும் என நாசா (NASA) தெரிவிக்கிறது.
சனி ஏன் மிதக்கிறது?
சனிக்கோள் முக்கியமாக ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற லேசான வாயுக்களால் உருவானது. பூமியைப்போல கடினமான பாறைகளால் அமையாமல், ஒரு பெரிய பலூன் போல லேசான வாயுக்களால் நிரப்பப்பட்டிருப்பதால், அதன் அளவு பெரியதாக இருந்தாலும் எடை (நிறை) குறைவாகவே உள்ளது. தண்ணீரில் ஒரு கோள் மிதக்குமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது அதன் அடர்த்தி மட்டுமே.
சனிக்கோள் தண்ணீரில் மிதக்கும் என்பது ஒரு கோட்பாட்டு ரீதியான உண்மை மட்டுமே. ஏனெனில், அவ்வளவு பெரிய தண்ணீர்ப்பரப்பு விண்வெளியில் கிடையாது.
அப்படியே வைத்தாலும் சனிக்கோள் சிதைந்துவிடும். இருப்பினும், பாறை கோள்களான பூமி மற்றும் செவ்வாயுடன் ஒப்பிடும்போது, வாயுக்கோள்கள் எவ்வளவு விசித்திரமானவை என்பதை இந்தத் தகவல் உணர்த்துகிறது.
வியக்க வைக்கும் விண்வெளி ரகசியம்! பூமியை விட 9 மடங்கு பெரியது… ஆனால் தண்ணீரில் மிதக்கும் சனிக் கோள்
Leave a Comment
