சென்னை, ஜன. 28- கிண்டி, கிங் நோய்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.417.07 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (27.1.2026) அடிக்கல் நாட்டினார்.
குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை
இது குறித்துத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2024-2025ஆம் ஆண்டிற் கான சுகாதாரத்துறை மானியக் கோரிக்கையில், தென் சென்னை பகுதிகளில் குழந்தைகளுக்கான உயர்தர சிறப்பு மருத்துவச் சிகிச்சை மற்றும் சேவைகளை வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, சென்னை கிண்டி, கிங் நோய்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் மேம்பட்ட மருத்துவத் தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன வசதிகள் கொண்ட குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில், கிங் நோய்தடுப்பு நிலைய வளாகத்தில் 6.5 ஏக்கர் நிலப்பரப்பில், 4,63,544 சதுர அடி பரப்பளவில் இக்கட்டடம் அமைய உள்ளது. இத்திட்டம் ரூ.417.07 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது.
இந்த உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம், நோயுற்ற குழந்தைகளுக்குச் சிறப்புப் பிரிவுச் சிகிச்சைகளை வழங்கும். மேலும்: குழந்தைப் மருத்துவப் பராமரிப்பு சேவைகளை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் உதவும். குழந்தை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும். தேசிய மற்றும் பன்னாட்டு முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வழிவகை செய்யும்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், சுகாதாரத்துறை செயலாளர் ப.செந்தில் குமார், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் எ.அருண் தம்புராஜ், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் நாராயணசாமி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
