சென்னை, ஜன. 27- பிளாஸ்டிக் கவர்களில் சூடான தேநீர், சாம்பார் போன்றவற்றை வாங்கிப் பயன்படுத்துவதால், கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் விரிவாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
சென்னை உயர் நீதிமன்றத்தில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் இந்த விசாரணை நடைபெற்றது.
அப்போது, பிளாஸ்டிக் கவர்களில் சூடான திரவங்களை ஊற்றும்போது, அவற்றில் உள்ள ‘பிஸ்பினால்-ஏ’ (Bisphenol-A) எனும் மைக்ரோ பிளாஸ்டிக் வேதித்துகள்கள், கர்ப்பிணியின் நஞ்சுக்கொடி வழியாகக் கருப்பைக்குள் சென்று, கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகத் தனியார் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
நீதிமன்றத்தின் நடவடிக்கை
இதையடுத்து மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு ‘மைக்ரோ பிளாஸ்டிக்’ தாக்கம் உள்ளதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு பின்வரும் துறைகளுக்கு நீதிபதிகள் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தனர்.
ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சகம், தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறைச் செயலர், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர். உள்ளிட்டோர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஜெ.ரவீந்திரன் மற்றும் வனத்துறை சிறப்பு அரசு வழக்குரைஞர் டி.சீனிவாசன் ஆகியோர் ஆஜராகினர்.
“மைக்ரோ பிளாஸ்டிக்கால் மனித ஆரோக்கியத்திற்குப் பாதகம் உள்ளதா என்பதை ஆராய சென்னை அய்அய்டி-யின் (IIT Madras) உதவியை நாடியுள்ளோம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஒன்றிய அரசு தரப்பிலும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யக் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், சூடான உணவுகளைப் பிளாஸ்டிக் கவர்களில் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனறும் உத்தரவிட்டனர்.
சளி, காய்ச்சல் பிரச்சினைக்காக பயன்படுத்தும் 174 மருந்துகள் தரமற்றவை
தரக் கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் தகவல்
சென்னை, ஜன. 27–- காய்ச்சல், சளி பிரச்சினைக்கான 174 மருந்துகள் தரமற்றவை, போலி என்பது ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து மாத்திரை, மருந்துகளையும் ஒன்றிய, மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்கின்றன. ஆய்வில் தரமற்ற, போலி மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறன.
அதன்படி, கடந்த மாதம் 1,000-க்கும் மேற்பட்ட மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், காய்ச்சல், சளி, கிருமித் தொற்று, ஜீரண மண்டல பிரச்சினை உள்ளிட்ட பாதிப்பு
களுக்கு பயன்படுத்தப்படும் 167 மருந்துகள் தரமற்ற தாகவும், 7 மருந்துகள் போலியாகவும் இருந்தது கண்டறியப்பட்டது.
அந்த விவரங்கள் பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக, ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது.
பிஜேபி ஆளும் மகாராட்டிராவில்
போதைப் பொருள்
ஆய்வகம் கண்டுபிடிப்பு
ஆய்வகம் கண்டுபிடிப்பு
ரூ.55 கோடி மதிப்பிலான
போதைப்பொருள் பறிமுதல்
போதைப்பொருள் பறிமுதல்
சதாரா, ஜன. 27- மகாராட்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், ரகசிய தகவலின் அடிப்படையில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சமீபத்தில் சோதனை மேற்கொண்டனர். இதில் ‘கோழிப்பண்ணை’ என்ற பெயரில், மெஃபெட்ரோன் போதைப்பொருள் உற்பத்திக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் செயல்பட்டு வந்த ஓர் ஆய்வகத்தைக் கண்டுபிடித்தனர்.
அங்கு நடத்திய சோதனையில் சுமார் ரூ.55 கோடி மதிப்பிலான போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, போதைப்பொருள் உற்பத்தியாளர் உள்ளிட்ட மூன்று பேரை அதே இடத்திலும், போதைப்பொருள் வாங்க வந்த இரண்டு பேரை மற்றொரு இடத்திலும் கைது செய்தனர்.
