மரணத்தைக் கொண்டு வரும் யூடியூப் ‘மருத்துவம்’ – விழிப்புணர்வு அவசியம்!

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இன்றைய டிஜிட்டல் உலகில், கைவிரல் நுனியில் அனைத்துத் தகவல்களும் கிடைப்பது எவ்வளவு நன்மையோ, அதே அளவு ஆபத்துகளையும் சுமந்து நிற்கிறது. குறிப்பாக, உடல் நலம் சார்ந்த விசயங்களில் முறையான கல்வி இல்லாதவர்கள் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிரும் ‘ஆலோசனைகளை’ அப்படியே பின்பற்றுவது தற்கொலைக்குச் சமம்.

வெண்காரம் (Borax) என்பது நோய்க்கு பயன்படுத்தும் மருந்தல்ல!

அண்மையில் மதுரையில் நிகழ்ந்த சோகம் நமக்கு உணர்த்துவது இதையே. கேரம் போர்டு விளையாடப் பயன்படுத்தும் பவுடரான ‘வெண்காரம்’ (Borax) ஒரு நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருள். இது பூச்சிக் கொல்லிகளிலும், தூய்மைப்படுத்தும் திரவங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

ஆபத்து: இதை நேரடியாக உட்கொள்ளும்போது உடலின் உள்ளுறுப்புகள் (சிறுநீரகம், கல்லீரல்) உடனடியாகச் செயலிழந்து, ரத்தப்போக்கு ஏற்பட்டு மரணம் நிகழ வாய்ப்புள்ளது.

மதுரை சோகம்

உடல் எடையைக் குறைக்க யூடியூப் காட்சிப் பதிவில் சொல்லப்பட்ட ஆலோசனையைத் தவறாகப் பின்பற்றி, ‘வெண்காரம்’ (Borax) எனும் வேதிப்பொருளை உட்கொண்ட மதுரையைச் சேர்ந்த முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி கலையரசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பகிரப்படும் போலி மருத்துவ ஆலோசனைகளின் ஆபத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

மதுரை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த கலையரசி, தனது உடல் எடையைக் குறைப்பதற்காக ஒரு யூடியூப் சேனலில் பார்த்த காட்சிப் பதிவின் அடிப்படையில், நாட்டு மருந்துக் கடையில் வெண்காரம் வாங்கிச் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே கடுமையான வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்று வீடு திரும்பிய அவருக்கு, மீண்டும் உடல்நிலை மோசமான நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நிபுணர்களின் எச்சரிக்கை

வேதியியல் பேராசிரியர்கள் கருத்து: வெண்காரம் (Borax) என்பது பூச்சிக்கொல்லிகளுக்கு இணையான நச்சுத்தன்மை கொண்டது. இது உணவாக உட்கொள்வதற்கான பொருளே அல்ல.

சித்த மருத்துவர்களின் விளக்கம்: சித்த மருத்துவத்தில் வெண்காரம் நேரடியாக மருந்தாகப் பரிந்துரைக்கப்படுவதில்லை. சில மருந்துகளில் மிக மிகச் சிறிய அளவில், முறையாகச் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே சேர்க்கப்படும். குறிப்பாக, உடல் எடை குறைப்பிற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று மருத்துவர் கு.சிவராமன் உள்ளிட்ட நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அலோபதி மருத்துவர்களின் எச்சரிக்கை: வெண்காரத்தை உட்கொண்டால் உடல் உள்ளுறுப்புகள் நஞ்சாகி, சிறுநீரகம் செயலிழந்துவிடும். அதிக ரத்தப்போக்கு மற்றும் வலிப்பு ஏற்படக்கூடும். உரிய நேரத்தில் (ஒரு மணி நேரத்திற்குள்) சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரைக் காப்பாற்றுவது கடினம்.

எந்த ஒரு முறையான மருத்துவ முறையிலும் உடல் எடையைக் குறைக்க வெண்காரம் பரிந்துரைக்கப் படுவதில்லை.

சமூக வலைதளப் பதிவுகள்

வருமானத்திற்காகப் பகிரப்படுபவை: பல யூடியூப் சேனல்கள் பார்வையாளர் எண்ணிக்கைக்காவும், வருமானத்திற்காகவும் மட்டுமே கவர்ச்சிகரமான தலைப்புகளைப் பயன்படுத்தி ஆபத்தான தகவல்களைப் பகிர்கின்றன.

தகுதியற்ற நபர்கள்: வெள்ளை அங்கி அணிந்திருப்பவர் எல்லாம் மருத்துவர் அல்ல. முறையான மருத்துவப் படிப்போ அல்லது ஆராய்ச்சி அனுபவமோ இல்லாதவர்களே இன்று இணைய வழியில் ‘இயற்கை வைத்தியர்களாக’ உலா வருகிறார்கள்.

சுய மருத்துவம் (Self-Medication): ஒருவருக்குப் பலன் தரும் விசயம் மற்றொருவருக்கு விஷமாக மாறலாம். மருத்துவப் பயனாளியின் வயது, உடல் நிலை, ஏற்கெனவே இருக்கும் நோய்கள் ஆகியவற்றைப் பொறுத்தே மருந்துகள் தீர்மானிக்கப்பட வேண்டும்.

விபரீதச் செயல்கள்: யூடியூப்பைப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது, பற்களைப் பிடுங்குவது, காலில் குத்திய முள்ளை அகற்ற ஊசிகளைப் பயன்படுத்துவது போன்றவை உயிரையே பறிக்கக்கூடிய தீவிரத் தொற்றுகளை (Sepsis) உண்டாக்கும்.

நாம் என்ன செய்ய வேண்டும்?

மருத்துவரை நாடுங்கள்: உடல் உபாதைகள் எதுவாக இருந்தாலும், அரசு அங்கீகாரம் பெற்ற அலோபதி, சித்த அல்லது ஆயுர்வேத மருத்துவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

சரிபார்க்கவும் (Fact Check): சமூக வலைதளங்களில் ஒரு தகவலைப் பார்த்தால், அதன் நம்பகத்தன்மையை அதிகாரப்பூர்வ மருத்துவ இணையதளங்களில் சரிபார்க்கவும்.

சுய மருத்துவம் தவிர்க்கவும்: நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் அனைத்துப் பொருட்களும் பாதுகாப்பானவை என்று நினைக்க வேண்டாம். சித்த மருத்துவத்திலும் மருந்துகள் முறையாக ‘சுத்தி’ (Purification) செய்யப்பட்ட பிறகே பயன்படுத்தப்படும். அதைச் செய்யாமல் நேரடியாக உட்கொள்வது நஞ்சாகும்.

அரசுக்கு ஒத்துழைப்பு: தவறான மருத்துவத் தகவல்களைப் பரப்பும் பக்கங்களை (Report) செய்து முடக்க வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *