சட்டப்பேரவை மரபுகளை மீறி ஆளுநர் ஆர்.என்.ரவி பா.ஜ.க.வின் பிரதிநிதியாகச் செயல்படுகிறார் தலைவர்கள் கடும் குற்றச்சாட்டு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன. 21– சட்டப் பேரவையை வேண்டுமென்றே புறக்கணித்து, பாஜகவின் பிரதிநிதியாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி: சட்டப்பேரவையில் இருந்து 3ஆவது ஆண்டாக உரையை வாசிக்காமல் வெளியேறி இருக்கிறார் ஆளுநர் ரவி. பிரதமர் மோடி 2019இல் பங்கேற்ற விழாவிலே தேசிய கீதம் மறுக்கப்பட்ட போது ஆளுநர் ரவியின் இதயம் ஏன் துடிக்கவில்லை? ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர், பாஜகவின் பிரதிநிதியாக செயல்படுகிறார். ஆளுநருக்கு அரசியல் ஆசை இருந்தால், பதவியிலிருந்து விலகிவிட்டு வந்து தேர்தலில் வென்று அரசியல் செய்யட்டும்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: சிறு குழந்தைகள் அடம்பிடிப்பது போல சட்டப்பேரவையில் தேசிய கீதத்தை முன்கூட்டியே பாட வேண்டும் என சிறுபிள்ளைத்தனமாக ஆளுநர் பேசுகிறார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் மரபை மாற்றக்கூடிய அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறதா? எதற்காக மரபுகளை மாற்ற துடிக்கிறார்கள்? சட்டப்பேரவையில் ஆளுநரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை. ஆனால் ஆஃப் செய்யப்பட்டதாக பொய் சொல்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இப்படிப்பட்ட அநாகரிகமான ஆளுநரை தமிழ்நாடும், தமிழ்நாடு சட்டப்பேரவையும் இதுவரை கண்டதில்லை. ஆளுநர் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். பாஜகவின் உண்மை முகத்துக்கு சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் பதிலளிப்பார்கள்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ: ஆளுநர் தன் உரையை வாசிக்காமல் வெளியேறி சட்டப்பேரவை மரபுகளை துச்சமாக கருதி அவமதித்து இருக்கிறார். தேசிய கீதம் பாட வில்லை என்று கூறி வேண்டுமென்றே பேரவையை புறக்கணித்துள்ளார். இதற்காக அவர் வெளியிட்ட அறிக்கையும் பாஜக அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கை போல் இருக்கிறது. அரசமைப்பு சட்ட நெறிகளை காலில் போட்டு மிதிக்கும் ஆளுநரின் செயல்பாடு கண்டனத்துக்குரியது.

வி.சி.க. தலைவர் திருமாவளவன்: சட்டப்பேரவையில் ஆளுநர் தனது கடமையை ஆற்றாமல் வெளியேறி யிருப்பது அவரது வாடிக்கையான அணுகுமுறைதான். இதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை. அவர் இப்பொறுப்பில் இருக்கும் வரை இத்தகைய அடாவடிகளை தொடரவே செய்வார். இது அவரது திட்டமிட்ட அவை மரபு மீறலாகும். தொடர்ந்து சட்டப்பேரவையை அவமதிக்கும் அவரது போக்கு கண்டனத்துக்குரியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: ஒவ்வொரு மாநில பேரவைக்கும் தனித்தனி மரபுகள் உள்ளன. ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்ற முறையில், அந்த மாநிலத்தின் மரபுகளை கடைப்பிடிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. அதற்கு மாறாக, ‘தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்’ என்று ஆளுநர் அத்துமீறுகிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: சட்டப்பேரவையில் உரையாற்றி, கூட்டத்தொடரை தொடங்கி வைக்க வேண்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டப்பேரவை மரபை உடைத்து சிதைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். எதிர்க்கட்சிகளும் சொல்ல முடியாத, அடிப்படை ஆதாரம் இல்லாத அரசியல் அவதூறுகளை வன்மத்துடன் வெளியிட்டுள்ளார். மலிவான அரசியலில் ஈடுபடும் ஆர்.என்.ரவி, ஒரு வினாடியும் ஆளுநர் மாளிகையில் இருக்க தகுதியற்றவர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன்: தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுக்கும் உரைகளை சட்டப்பேரவையில் ஆளுநர் வாசிப்பது தான் மரபு. ஆனால் அவர் எதிர்க்கட்சிகளை விட ஒருபடி மேலே சென்று, அரசு தயாரித்த உரைகளை படிக்காமல் வெளிநடப்பு செய்து, அரசுக்கு எதிராக ஆளுநர் பேசுவது அரசியலமைப்புக்கு முரணானது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *