சென்னை, ஜன.14-பொங்கல் திருநாளின்போது கனிமொழி எம்.பி. ஏற்பாட்டில் ‘சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா’ மிகக் கொண்டாட்டமாக நடத்தப்படுவது வழக்கம். இந்த விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக சென்னையில், கனிமொழி எம்.பி. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
இந்த ஆண்டின் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா மாபெரும் கலைவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை 6 மணியளவில் தொடங்கி வைக்கிறார்.
15ஆம் தேதி (நாளை) முதல் 18ஆம் தேதி வரையில் (மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை) 20 இடங்களில் 40 வகையான கலைகளுடன் இந்த விழா நடைபெறுகிறது.
சென்னை சங்கமத்தில் முதன்முறையாக ‘கோ- ஆப்டெக்ஸ்’ மற்றும் கலை பண்பாட்டுத் துறை இணைந்து நடத்தும் அலங்கார ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி காணும் பொங்கலான 17ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை அருங்காட்சியகத்தின் வளாகத்தில் தேசிய கலைக்கூடம் முன்புறம் மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
