சென்னை, ஜன. 12- நம்முடைய மொழியையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மறந்துவிடக் கூடாது என்று அயலகத் தமிழர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் “தமிழால் இணைவோம் – தரணியில் உயர்வோம்” என்ற தலைப்பில் 2 நாள் நடைபெறும் அயலகத் தமிழர் தினம்-2026 விழா சென்னையில் நேற்று (11.1.2026) தொடங்கியது.
மொழி, பண்பாடு
இணையவழியில் நடத்திய பேச்சு, ஒப்புவித்தல், மாறுவேடம், கதை சொல்லுதல் போட்டிகளில் வெற்றி பெற்ற 15 பேருக்கு சான்றிதழ், காசோலைகளை துணை முதலமைச்சர் உதயநிதி வழங்கினார். தொடர்ந்து, விழா மலரை வெளியிட அமைச்சர் துரைமுருகன் பெற்றுக் கொண்டார். தமிழ்நாடு அரசின் சார்பில், ரூ.10 லட்சம் மதிப்பிலான இசைக் கருவிகளை மொரீஷியஸ் நாட்டுக்கு பிரதிநிதி மலையப்பனிடம் உதயநிதி வழங்கினார்.
பின்னர் உதயநிதி பேசியதாவது: தமிழ் நம் அனைவரையும் இணைக்க கூடிய மொழி. தமிழ் என்கிற அடையாளத்துக்கு முன்னால், வேறு எந்த அடையாளமும் நிற்க முடியாது. எல்லா பேதங்களையும் தாண்டி நம் அனைவரையும் இணைத்திருப்பது நம்முடைய தாய் மொழித்தமிழ். அப்படி நாம் அனைவரும் தமிழால் இணைந்ததால்தான், இன்றைக்கு தரணியை வென்று கொண்டிருக்கிறோம்.
அயலகத் தமிழர்களுக்கு அரசு தந்த அடையாள அட்டைதான் உங்களுடைய தாய்வீட்டு அடையாளம். நம்முடைய மொழியையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மறந்துவிடக் கூடாது. ஆண்டுதோறும் வெளிநாட்டில் வாழுகின்ற தமிழர்களுடைய அடுத்த தலைமுறை பிள்ளைகளை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து, நம்முடைய பண்பாட்டு சின்னங்களை, அடையாளங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.
இந்த உலகத்தில் நமக்கென்று இருக்கின்ற இடம் தமிழ்நாடு என்ற நம்பிக்கை அடுத்த தலைமுறைக்கு நிச்சயம் ஏற்படும். இவ்வாறு பேசினார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சா.மு.நாசர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, கவிஞர் சல்மா, அயலகத் தமிழர் நலவாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, பொது மற்றும் மறுவாழ்வுத் துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கர், துறை ஆணையர் மா.வள்ளலார், கனடா எம்.பி. ஜூவனிதா நாதன், இலங்கை எம்.பி. வி.எஸ்.ராதாகிருஷ்ணன், மலேசியா முன்னாள் துணை அமைச்சர் பி.கமலநாதன்உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
