வாசிங்டன், ஜன.11– ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீத வரியை விதித்து வருகிறது.
வரி விதிப்பு தொடர்பாக இரு நாடுகளின் மூத்த அதிகாரிகள் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இதுகுறித்து அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் கூறியதாவது:
இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விட்டது. வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அதிபர் டிரம்பை, பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுமாறு அறிவுறுத்தினேன். ஆனால் எனது கோரிக்கையை இந்திய குழுவினர் ஏற்கவில்லை. அதிபர் டிரம்பிடம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேச மறுத்ததால் இரு நாடுகள் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் முடங்கியிருக்கிறது.
எனினும் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் அதிபர் டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். அந்த நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகி விட்டது என்றார்.
அமெரிக்க அமைச்சரின் தகவல் தவறானது: ஒன்றிய அரசு விளக்கம்
ஒன்றிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர்ஜெய்ஸ்வால் டில்லியில் நேற்று முன்தினம் (9.1.2026) கூறியதாவது:
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி முதல் இந்தியா, அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருதரப்பும் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி உள்ளன. இந்த பேச்சுவார்த்தைகளில் ஒப்பந்தத்தின் இறுதி வடிவத்தை எட்டினோம்.
இருதரப்புக்கும் பலன் அளிக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும் நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. கடந்த 2025ஆம் ஆண்டில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் 8 முறை தொலைபேசியில் பேசி உள்ளனர். அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். தற்போது அமெரிக்க வர்த்தக அமைச்சர் லுட்னிக் கூறியிருக்கும் தகவல் முற்றிலும் தவறானது.இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
