சென்னை, ஜன.9 தமிழ்நாடு முழுவதும், ரேசன் கடைகள் வாயிலாக, கார்டுதாரர்களுக்கு தலா, மூன்றாயிரம் ரூபாய் ரொக்கம் அடங்கிய, பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை நேற்று (8.1.2026) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு அரசு, பொங்கல் விழாவை முன்னிட்டு, 2.22 கோடி அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு, தலா, மூன்றாயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பை அறிவித்துள்ளது. அதனுடன் சேர்த்து, இலவச வேட்டி, சேலையும் வழங்கப்பட உள்ளன. இதற்காக கடை களுக்கு, பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை ஆகியவை அனுப்பப் பட்டு உள்ளன.
பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க, ஒரே சமயத்தில் கூட்டமாக வரக் கூடாது என்பதற்காக, எந்த தேதியில், எந்த நேரம் கடைக்கு வந்து வாங்க வேண்டும் என்ற விபரம் அடங்கிய, ‘டோக்கனை’ அட்டைதாரர்களின் வீடுகளில், கடந்த 4.1.2026 முதல், ரேசன் ஊழியர்கள் வழங்கி வந்தனர். இந்நிலையில் நேற்று (8.1.2026) சென்னை, ஆலந்தூர் நசரத்புரத்தில் உள்ள ரேசன் கடையில், பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, அனைத்து கடைகளிலும் அட்டைதாரர்களுக்கு, பொங்கல் தொகுப்பு வழங்கத் துவங்கி உள்ளது.
