பீகாரில் ரியல் எஸ்டேட் மாபியாக்களின் காட்டாட்சியில் கைகாட்டும் இடங்கள் எல்லாம் குடியிருப்புகள் இடிக்கப்படுகின்றன. பாட்னா நகரின் மிகவும் முக்கியமான பகுதியில் 10.11 ஏக்கர் நிலத்தை திருப்பதி கோயில் கட்ட ரூ.1க்கு பீகார் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்த ‘புனித’மான முடிவாம்?!
பீகார் முழுவதும், குறிப்பாகப் பாட்னா, முசாபர்பூர், தர்பங்கா, நாளந்தா, சீதாமர்ஹி, போஜ்பூர் போன்ற மாவட்டங்களில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை அகற்றும் நடவடிக்கையாகவே இந்தக் கட்டட இடிப்புகள் நடைபெறுவதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. பாட்னா காந்தி வீதிப் பகுதியில் உள்ள சாலைகளில் 70 ஆண்டுகளாக வீடுகட்டிக் குடியிருக்கும் நபர்களின் வீடுகள் கூட திடீரென சட்டவிரோத கட்டடம் என்று காலையில் அறிவிக்கை (நோட்டீஸ்) அனுப்பி மாலையில் இடிக்கப்படுகிறது.
மாநில துணை முதலமைச்சரும் (மற்றும் உள்துறை அமைச்சருமான) சாம்ராட் சவுத்ரி, இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், சட்டவிரோத ஆக்கிரமிப்புகளைத் தடுக்கும் கட்டாய நடவடிக்கையாகவே மேற்கொள்ளப்படுவதாகச் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதைத் திட்டவட்டமாக மறுக்க முடியாது என்றும், இது ஒரு வழக்கமான நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாட்னா மாவட்ட நிர்வாகம், காந்திவீதி பாலி கஞ்ச் போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், அரசு நில விதிமுறைகளை அமல்படுத்தவும் இந்த இடிப்புகளை மேற்கொள்வதாகக் கூறியுள்ளது.
மோடி பீகார் தேர்தலின் போது 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியில் இருந்த லாலுவின் ஆட்சியை காட்டாட்சி என்று கூறினார்.
ஆனால், உண்மையில் காட்டாட்சி என்பதை மக்கள் கண்களின் முன்னால் இப்பொழுது காண்கின்றனர்.
இது எல்லாம் சில ரியல் எஸ்டேட் முதலாளிகளின் உத்தரவின் பேரில் நடக்கிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். அதாவது ரியல் எஸ்டேட் முதலாளிகள் தான் தற்போது பீகாரை ஆட்சி செய்கின்றனர் என்று எண்ணத்தோன்றும் வகையில் இந்த இடிப்பு நடவடிக்கை தொடர்கிறது.
முதலமைச்சர் நிதிஷ் குமார் முதலமைச்சர் ஆன பிறகு முதல் அமைச்சரவைக் கூட்டத்தின் ஒப்புதலுடன், பாட்னாவில் உள்ள முக்கிய இடமான மோகாம கஸ் பகுதியில் 10.11 ஏக்கர் நிலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலம் 99 ஆண்டு குத்தகைக்கு, ஆண்டுக்கு ரூ.1/- என்ற குறியீட்டுத் தொகையில் வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் கோயில், கிழக்கு இந்தியப் பகுதியில் உள்ள பக்தர்கள் ‘ஏழுமலை’யான் தரிசனத்தைப் பெற வசதி செய்யும் என்றும், கலாச்சார ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் பீகாரில் மதச் சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
ஒரு காலத்தில் முற்போக்குவாதியாகவும், சமூகநீதிப் போராளியாகவும் பேசப்பட்ட நிதிஷ்குமார் –இப்பொழுது இந்த முதலமைச்சர் நாற்காலிப் பைத்தியத்திற்கு ஆளாகி தலைகீழ் மனிதராக மாறிவிட்டார்.
பெயரளவிற்குத்தான் முதலமைச்சரே தவிர, ஆட்டிப் படைப்பது எல்லாம் ஆர்.எஸ்.எஸ். – பிஜேபிதான்.
நம்முடைய திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மிகச் சரியாகவே, துல்லியமாகவே கூறியுள்ளார்.
‘அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், ஆளப் போவது டில்லி ஆட்சியாகத்தான் இருக்கும்’ என்றாரே – அது நமது முதலமைச்சரின் ஆழமான அரசியல் முதிர்ச்சியைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
அ.தி.மு.க.வின் பெயரில் அண்ணா இருக்கிறது, திராவிடம் இருக்கிறது – இருந்து என்ன பயன்?
பேச முடியாத பெண்ணை தேன்மொழி என்று அழைப்பதற்குச் சமமாகும்!
